செவ்வாய், 26 ஏப்ரல், 2016

குதிரைக்கு படையல்

குதிரைப்  பொங்கல் பண்டிகை 

                      எங்கும் பசுமை சூழ்ந்து இயற்கை தந்த கொடையான எழில் தவழும் மலைகளுடன் காட்சியளிக்கும் பிரதேசம் திண்டுக்கல் சிறுமலை. மாட்டுப்  பொங்கலன்று இம்மலையில் உள்ள மக்கள் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அனைத்து கிராமங்களிலும் விவசாயத்திற்கு பெரிதும் உதவும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடும் நன்னாளில் இம்மக்கள் மட்டும் ஏன் குதிரைகளுக்கு பொங்கல் வைக்கின்றனர்? குதிரைகள் எவ்வாறு இம்மக்கள் வாழ்வோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. காரணம் அறிய சிறுமலைக்குள் பிரவேசிப்போமா?

                                                                சிறுமலை 

                       மெல்ல மெல்ல சுற்றுலா பயணிகளை கவரக் கூடிய இடமாக மாறி வரும் சிறுமலையில் பார்க்க வேண்டிய சில இடங்கள் உள்ளன. வெள்ளிமலை சிவன் கோவில், தென் மலை, ருத்ராட்சை மரங்கள் , அகஸ்தியர்புரம் ஆகியன அமைதி விரும்பிகள் அதிகம் விரும்பும் இடமாகும் .சிறுமலையில் 3 தனியார் பள்ளிகளும், 2 அரசு பள்ளிகளும் உள்ளன. மேலும் இங்கே ஹில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்று இயற்கை அமைத்த மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இப்பள்ளியில் வெளி நாட்டினர் அதிகம் தங்கி படிக்கின்றனர்.


                                        ஹில்லாக்  இன்டர்நேஷனல் பள்ளி 

                     தென்மலை பகுதியில் பாண்டியர் காலத்து உடைந்த சிலைகள் சில காணப்படுகின்றன. பழையூர்,அகஸ்தியபுரத்தில் 4-5 ருத்திராட்ச மரங்கள் உள்ளன. அன்றே பிறந்து அன்றே அழியும தெய்வத்தை வைத்து காமன் பண்டிகை என்ற திருவிழா பழையூர், புதூர் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.


 
                                              சிறுமலை செல்லும் வழி 

                     ஆதிவாசிகள் இங்கு பொன்னருவி, ஊரணி பகுதிகளில் அதிகம் வசிகின்றனர் .இவர்கள் இம்மலையில் 650 ஏக்கர் அளவில் பரந்து விரிந்துள்ள மீனாட்சி எஸ் டேட்டில்  கூலி வேலை செய்வதோடு ஓய்வு நேரங்களில் தேன் எடுத்தல், மூலிகை சேகரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த எஸ்டேட்டில் மிளகு, பலா, காப்பிக் கொட்டை போன்றவை பயிரிடப்படுகிறது.


                                              சிறுமலை வாழைப்பழம் 

                  சிறுமலையைப் பற்றி அதிகம் பேருக்கு தெரியாவிட்டாலும் சிறுமலை வாழைப்பழத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். இவ்வாழைப்பழத்திற்கு  புவிசார்க் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. முடிக்கொத்து நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் வாழை விவசாயம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆழமான குழி தோண்டி அதில் மருந்து தெளித்த நீரை ஊற்றி அதன் பின்னர் வாழைக்கன்னை நட்டு வைத்து பயிர் செய்கின்றனர். சிறுமலைப் பழத்தோடு இங்கு பேயன், கற்பூரவல்லி வகை வாழைப் பழங்களும் பயிர் செய்யப்பட்டாலும் சிறுமலை வாழையே எங்கும் முன்னிலையில் நிற்கிறது. ஏனெனில் இப்பழம் அருகே எங்கே மூடி வைத்து இருந்தாலும் வாசம் வீசுவதோடு சாப்பிட சுவையாகவும் இருக்கிறது.


                                                       சிறுமலை வாழை 

                   வாழை விவசாயத்தோடு இங்கே பல ஏக்கர் பரப்பளவில் மா, பலா, முந்திரி, சௌசௌ, எலுமிச்சை, மாதுளை போன்றவைகளும் விளைவிக்கப்படுகிறது. சிறுமலை பலா மிகவும் சுவையோடு இருப்பதோடு பிஞ்சிலேயே பறிக்கும் காய் (பலா பிஞ்சு ) அங்குள்ள மக்கள் பலரால் பலாக் கறி என்ற உணவு பதார்த்தமாக சமைக்கப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு கறி போலவே சுவையைத் தருகிறது.   


                                                    பலாப் பழம், பலாப் பிஞ்சு 



                                                  பலாக் கறி சமையல் 


                                                     பலாச்சுளைகள் 

                     சிறுமலையில்  உள்ள காட்டுப்பகுதி அரளக்காடு, குட்லாடம்பட்டி வழியாக மதுரை வரை நீண்டு செல்கிறது. இந்த காட்டில் மான், முயல், கின்னி கோழி, எருமை, கேளையாடு, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் வசிக்கின்றன. இங்கு சாத்தையாறு, சந்தானவர்த்தினி என இரு ஆறுகள் உள்ளது. இதன் அருகே உள்ள மீன்முட்டிப் பாறையில் ஆதிவாசிகளின் குகை ஓவியங்கள் காணக் கிடைக்கிறது. 


சிறுமலைக் காட்டுப் பகுதி 

                       கிராமங்களில் மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுவது போலவே இங்கே குதிரைகள் விவசாயப்  பொருட்களை சுமந்து வருவதற்கு உதவிகரமாக உள்ளது. ஏனெனில் மக்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து 10 km தூரத்தில் காடுகள் உள்ளன. இக்காடுகளில்தான் விவசாய பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. எனவே இப்பொருட்களை சுமந்து வந்து பேருந்துகளில் ஏற்றுவதற்கு குதிரைகளே பயன்படுகின்றன. முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் அதிகம் பேருந்து வசதி இல்லாததால் மனிதர்களை சுமப்பதற்கும்  குதிரைகள்தான் பயன்பட்டன . ஆனால் இக்குதிரைகளில்  பெரும்பாலும் ஆண்களும், குழந்தைகளும் மட்டுமே சவாரி செய்தனர்.

                                             குதிரைக்கு பொங்கல் படையல் 

                    இங்கு விளையும் பொருட்கள் குதிரைகள் உதவியுடன் பேருந்தில் ஏற்றப்பட்டு, பேருந்து வழியாக திண்டுக்கல் கொண்டுவரப்பட்டு சிறுமலை செட் என்ற இடத்தில விற்பனைக்கு வருகின்றன. இந்த சிறுமலை செட் பகுதி திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்திற்கு கீழே உள்ளது. சிறுமலையில் விளையும் அனைத்து வகை பொருட்களும் இங்கு கிடைக்கும். இங்கிருந்தே கடைகளுக்கும்  விற்பனையாகின்றன.


                                               பராமரிக்கப்படும் குதிரைகள் 
                 
                         எனவேதான் தங்களுக்கு பெரிதும் உதவும் குதிரைகளுக்கு இம்மக்கள் மாட்டுப் பொங்கலன்று குதிரைகளை அலங்கரித்து பொங்கல் வைத்து படையல் இடுகின்றனர். சிலர் தங்கள் குதிரைகளோடு புகைப்படமும் எடுத்து வைத்து வழிபடுகின்றனர்.
                     


                                   சிறுமலைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து 


                                     சிறுமலைக்கு செல்லும் தனியார் பேருந்து 

                           
                                      சிறுமலைக்குச்  செல்ல திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து SVR, STR என்ற தனியார் பேருந்துகளும், RMTC அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் புதூர், தென்மலை வரை செல்கிறது. இந்த கோடைக்  காலத்தில் எளிமையான  செலவில் சுற்றிப் பார்க்க அருமையானதோர் சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக  திண்டுக்கல் சிறுமலை அமைந்துள்ளது. நீங்களும் ஒரு முறை அமைதியும், அழகும் நிறைந்த இச்சிறுமலை பிரதேசத்திற்கு சென்று வாருங்களேன்.




















9 கருத்துகள்:

  1. குதிரை கொள்ளு சாப்பிடும். ஆனால் பொங்கலும் சாப்பிடும் என்பது புது செய்தி,
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது எழுத்துக்களை படித்து கருத்துரை இட்டதற்கு நன்றி ....

      நீக்கு
  2. Superb.useful information .the way of ur presentation is like tourist guide books.nice work.keep it up.Read more and try to find out unknown infos.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. சிறுமலையில், தென்மலை பகுதியில் என் நண்பரின் தோட்டம் உள்ளது. அங்கு அடிக்கடி செல்வேன். இயற்கை விரும்பிகள் பலரும் தார்சாலையில் மட்டுமே பயணம் செய்து திரும்பிவிடுகின்றனர். என் நண்பரின் தோட்டம் தோராயமாக 'குட்லாடம்பட்டி அருவி'க்கு மேலே உள்ளது. கருப்பு கோவிலும் மிக அருகிலேயே உள்ளது.அப்பகுதியில் வாழை, பலா, மிளகு, செள செள(சீமைக்காய்), பீன்ஸ், அவரை போன்றவை விளைவிக்கப்படுகின்றன. எனக்கு மிகவும் பிடித்த இடம்.

    பதிலளிநீக்கு
  5. சிறுமலை வாழைப்பழமும், குளிரும் எனக்கு மிகவும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு
  6. வாடிப்பட்டி பகுதியில் இருந்து தென்மலை கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டால் அப்பகுதியில் விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன