சனி, 21 மே, 2016

ஆட்டுக்கறி விருந்து (பகுதி -2)

ஞாயிறு ஸ்பெஷல் (கறிக்குழம்பு சமையல் )

                       இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பகுதியில் ஆட்டுக்கறி விருந்து சமையல் மற்றும் சாப்பாடு பற்றிய பதிவு -2  .... 

ஆட்டுக்கறி விருந்து இலையில்  

                                   வெயில் காலம் தொடங்கி விட்டதால்  சிக்கன் வேண்டாம் என வீட்டில் அனைவரும் முடிவு செய்ததால் இந்த வாரம்  ஞாயிறு ஸ்பெஷலாக கறிக்குழம்பு வைக்கலாம் என முடிவு செய்தோம்.    


ஆட்டுக்கறி பார்சல் இலையில் 

                               எங்கள் வீட்டில் எப்போது ஆட்டுக்கறி வாங்குவதென்று நினைத்தாலும் சின்னக்காளை கறிக்கடையில்தான் கறி வாங்குவோம். இந்த கடையில் ஞாயிறு என்றாலே கறி வாங்க ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நிரம்பி வழியும். எனக்கு ஈரல், எனக்கு கறி, சூப்பெலும்போடு கொழுப்பு சேர்த்து வையுங்கள் என பலவித குரல்கள் கேட்டபடி இருக்கும். நாங்களும் இதை வேடிக்கை பார்த்து ரசித்தபடியே நின்று கறி வாங்குவோம். 


ஆட்டுக்கறி எலும்பு சூப் 

                                      அன்றும் அரைமணிநேரம் காத்திருந்து கறி வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றோம். கறியை அலசி விட்டு மஞ்சள், சீரகம் போட்டு வேக வைத்து அம்மா சூப் தயாரித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொடுத்தார்கள். சூப்பில் நல்லெண்ணெயும், கொழுப்பும் மிதக்க அதனோடு இருந்த கறி எலும்பின் வாசனையும் சேர்ந்து சற்று ஆறும் வரை கூட காத்திராது குடிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. குழம்பிற்கு பதிலாக சூப்பையே  சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிடும் அளவிற்கு  சூப் சுவையாக தயாரித்திருந்தார்கள்.


உருளையோடு வறுத்த கறி 

                                               கறி வறுவல் செய்ய எங்கள் வீட்டில் அம்மாவே கறி மசால் பொடி  ரெடி பண்ணி வைத்திருப்பார்கள். அதனோடு சிறிது தேங்காயும் துருவி  ஊற்றி மசாலாவை கறியிடன் கொதிக்க விட்டு சிறிது சிறிதாக சுண்ட விட சுண்ட விட  வீடெங்கும் வறுத்த கறி வாசனை தூக்கியடித்தது. இந்த கிரேவியை  சாப்பாட்டோடு பிசைந்து அம்மா உருண்டை பிடித்து தரும் போது அதன் சுவையை சொல்ல வார்த்தையே இல்லை.


வறுத்த கறி படம் - 2

                                                 கறியுடன்  சேர்த்த உருளைகிழங்குடன் கூடிய கிரேவி ரசம் சாப்பாட்டுக்கு அருமையான காமினேசன். அத்தோடு  பரோட்டா, சப்பாத்திக்கும் தொட்டு கொண்டு சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

கறி உருளைக் குழம்பு 

                                          கறிக்குழம்பில் வழக்கம் போலவே கறியுடன் உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், கத்தரிக்காய் என் அனைத்தும் சேர்த்து குழம்பு கூட்டி இறக்கியதும் சுவையான ஆட்டுக்கறி விருந்து தயார். வாழை இலையில் சாதம், கறிக்குழம்பு, கறி கிரேவியிடன் உருளை, முருங்கைக்காய் என சேர்த்து சாப்பிட ஒவ்வொரு காயும் தனி ருசியில் மிகவும் சுவையுடன்  இருக்க அறுசுவை விருந்தாக அமைந்தது இந்த வார ஞாயிற்றுக்கிழமை.    








2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன