திங்கள், 8 பிப்ரவரி, 2016

திண்டுக்கல் பூ மார்க்கட்

பூ விற்போர் உலகம்
                                                   
                          சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உலகத்தை பார்க்க வேண்டுமென்று  ஆசைபட்டால் திண்டுக்கல் பூ மார்க்கட்டிர்க்கு  வந்து பாருங்களேன் . நான் சிறு வயதாய் இருந்த போதிலிருந்தே என் அம்மாவுடன் அடிக்கடி பூ மார்க்கட்டிற்கு செல்வேன் .தெருவில் கொண்டு வந்து பூ விற்ப்போரிடம் கிடைப்பதை விட இங்கு விலை சற்று குறைவாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகள் எந்த விழாக்கள்,பண்டிகைகள் என்றாலும் அதற்கு முதல் நாளே இங்கு வந்து பூ வாங்கி செல்வர் .பூக்களை வாங்குவோரும் விற்போரும் பேசும் வாய்ப் போரையும் ,விதவிதமான மலர்கள்  ஆங்காங்கே குவித்து வைக்கப்படிருப்பதையும் பார்ப்பதர்க்காகவே நான் அடிக்கடி அங்கே செல்வேன். அதிலும் வண்ண வண்ணமான ரோஜா பூக்கள் மீண்டும் மீண்டும்  பார்க்ககும்  ஆவலைத்  தூண்டும் . அதனாலேயே நான் ப்ளாக் தொடங்கி பதிவு போட ஆரம்பித்தவுடனேயே நம் திண்டுக்கல் பூ மார்க்கட்டைப் பற்றி ஏன் எழுதக்கூடாது எனத் தோன்றியதின் விளைவே இப்புதிய பதிவு (திண்டுக்கல் பூ மார்க்கட் )

                                                           பூ மார்க்கட் முன்புறம்

               திண்டுக்கல் பூ மார்க்கட் பேருந்து நிலையத்திலிருந்து சற்று அருகாமையில் டட்லி பள்ளிக்கு எதிரே அமைந்துள்ளது . முன்பு தனியார் வசம் இருந்த இப்பூ மார்க்கட்  1993 முதல் நகராட்சியால் தத்தெடுக்கப்பட்டு அண்ணா வணிக வளாகம் என்ற பெயரில்  நடத்தப்படுகிறது. இப்பூ மார்கட் காலை 4.30 மணியிலிருந்தே தன் இயக்கத்தை தொடங்குகிறது. சில சமயங்களில் மாலை 8 மணி வரை கூட இங்கு  பூ விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கும். இம்மலர்ச் சந்தை  மேல்தளத்தில்(மாடியில்) இயங்குகிறது.  டட்லி பள்ளியருகே நின்று பார்த்தாலே மேலே ஏறும் படிகளை காணலாம் . படிகளுக்கு கீழேயே ஒரு வயதான தம்பதியர் அமர்ந்து மாலை கட்டி கொண்டிருப்பர் .இவர்கள் மேட்டுபட்டியில் இருந்து  தினமும் இங்கே வந்து பூமாலை  வியாபாரம் செய்கின்றனர் . அவர்களுக்கு சற்று தள்ளி படிகளுக்கு அடியில் இன்னும் சிலர் பூக்களை கட்டிக் கொண்டே விற்ப்பனையும் செய்கின்றனர். இந்த பூ மார்க்கட்டிர்க்கு கீழே செல்போன் சர்வீஸ் கடை, கோ ஆப்டெக்ஸ், காதி கிராப்ட் என நிறைய கடைகள் உள்ளன.

                                             மாலை கட்டும் வயதான தம்பதியர்
     
                                      படிகளுக்கு அருகேயே பூக்கட்டி விற்போர்

                                                    மேலே ஏறும் படிக்கட்டு வழி

                                                  பூ மார்க்கட்டின் பின்புற வழி


                                                  பின்புற வழி படம் இரண்டு (2)

                             இந்த பூ மார்கட்டிற்க்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. பின்புறவழி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. அருகிலேயே  அரசு மருத்துவமனை (GH ), அம்மா உணவகம், சிறிய காய்கறி மார்க்கட் என மக்களுக்கு  தேவையான அனைத்தும் அமைந்துள்ளது. பின்புற வழியிலும்  பூ மார்கட்டிற்கு செல்லும்  படிகளுக்கு இருபுறமும் ப்ரஷ் பேக்கரி ,ஜெராக்ஸ் கடை ,முருகன் இட்லிக்கடை, டீக்கடைகள் என நிறைய கடைகள் உள்ளன. இரண்டு வழிகளிலுமே மக்கள் சென்று தங்களுக்கு தேவையான பூக்களை வாங்குகின்றனர் .

                                            பூ மார்கட்டின் பின்புறக் காட்சிகள்

                               பூ மார்க்கட்டின் மாடியில் இருந்து பின்புறம் பார்த்தால்  அரசு மருத்துவமனை (GH),பேருந்து நிறுத்தம், மற்றும் மக்களின் போக்குவரத்துக்களை நன்கு காணலாம்.

                                                      சிறிய காய்கறி மார்க்கட்

                      இந்த காய்கறி கடைகள்  பூ மார்க்கட்டின் இடது புறத்தே உள்ளது. பூ வாங்க வருவோர் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும் சில சமயம் இங்கே வாங்கி செல்கின்றனர்.

                                விற்பனைக்கு கொட்டி வைக்கப்பட்டுள்ள பூக்கள் 


                 குட்டி ஹாலந்து என அழைக்கப்படும் திண்டுக்கல்லில்  பூக்கள் அதிகளவில் உற்ப்பத்தியாகின்றன . திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களான ஏ.வெள்ளோடு , அனுமந்தன்ராயன்கோட்டை ,வடமதுரை, அய்யலூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், ஆவாரம்பட்டி, செந்துறை, மலைகேணி, ராசாக்கப்பட்டி, புகையிலைப்பட்டி, ம.மு.கோவிலூர் ஆகிய பகுதிகளில் பூக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. மல்லி, முல்லை, இருவாட்சி, துளசி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை என அனைத்து பூக்களும் உற்ப்பத்தி செய்யப்பட்டு திண்டுக்கல் மலர்ச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன . இவை மலேசியா,சிங்கப்பூர்  போன்ற  நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன .

இப்போது பூ மார்க்கட்டின் மேலேறி வருவோம் .....

                                                பூக்களை கட்டிகொண்டிருப்போர்

                   பூமார்க்கட்டின்  படிகளில் ஏறி மேலே சென்றவுடனேயே  சள  சளவென மனிதர்களின் பேச்சு குரல்களும் , பூக்களின் நறுமணமும் வீசி நம்மை அந்த பூ விற்போர் உலகத்திற்குள் வரவேற்ப்பதை போல்  தோன்றும். படி ஏறி முடித்து எதிரே பார்த்தால்  துளசி கட்டுக்கள் மற்றும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் முதலானவற்றை சிலர்  விற்றுக் கொண்டிருப்பர். அங்கிருந்து  சற்றே  இடது புறம் திரும்பி பார்த்தோமானால் பலர் அவரவர்களுக்கு சௌகரியப்பட்ட நிலையில் அமர்ந்து பூக்களை கட்டிக்  கொண்டிருப்பது தெரியும். அவர்கள் யார் ? இப்பூ விற்போர் உலகத்துக்குள்  அவர்களின் பங்கு என்ன ?

                                                                                           தொடர்ந்து விரியும் உலகம் ...

                                                                                                        அடுத்த பதிவில் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன