சனி, 7 ஜனவரி, 2023

சிவகாமியின் சபதம் மனதை தொடும் நான்காம் பாகம்(சிதைந்த கனவு)

                            சிவகாமியின் சபதம் திரு.கல்கி அவர்கள் எழுதிய புகழ்பெற்ற நாவல். இதன் முதல் மூன்று பாகங்களை ஏற்கனவே நமது பார்வையில் என்ற தலைப்பில் நாம் பார்த்த நிலையில் நான்காம் பாகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன். 


                             சிவகாமியின் சபதம் நான்காம் பாகம் சிவகாமி சாளுக்கியரிடம் சிறைப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு பிறகான சம்பவங்களை வாதாபி போருடன் சேர்த்து விளக்குகிறது. இதற்குள் மகேந்திர பல்லவரின்  இறப்பு, மாமல்லரின் திருமணம்  பாண்டிய      இராஜகுமாரியுடன் நடைபெற்று இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிலை, இது எதுவும் தெரியாமல் மாமல்லரையே நினைத்து அவர் போர் தொடுத்து, வாதபியை எரித்து தன்னை மீட்டுச் செல்வார் என்ற சிவகாமியின் மனோநிலை என பலவற்றையும் தொட்டுக் கதை நகர்கிறது.


                                           பல சவால்களை கடந்து பெரும்படை திரட்டி மாமல்லரின் தலைமையில், பரஞ்சோதியை சேனாபதியாக கொண்டு படையெடுத்துச் செல்லும் பல்லவர் படை பெரும்  வெற்றியடைந்து வாதாபிக்  கோட்டையை முற்றுக்கையிடுகிறது. வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி கோட்டைக்குள் இல்லாமல் அஜந்தா கலை விழாவுக்கு சென்ற நிலையில் கோட்டை சரணடைவதாக சமாதானத்  தூது மாமல்லரிடம் வந்து சேர்கிறது. 


                                    அஜந்தாவில் இருக்கும் சக்கரவர்த்திக்கு இச்செய்தி தாமதமாகவே தெரிய வர தன்னிடம் ஏன் சொல்லவில்லை என தனது சகோதரர் நாகநந்தியுடம் வினவ வேண்டுமென்றேதான் மறைத்தேன், உனக்காக அரச பதவியை துறந்து புத்த பிட்சு ஆன என்னிடம் நீ சரியாக நடக்கவில்லை என சிவகாமியை காரணம் காட்டி சண்டை முற்ற உடன் பிறந்ததால் உன்னை உயிருடன் விடுகிறேன், இங்கிருந்து சென்று விடு என சக்கரவர்த்தி கர்ஜிக்க நாகநந்தி அங்கிருந்து செல்கிறார்.


                              புலிகேசி வேறொரு படையுடன் வாதாபியை நோக்கிச்  செல்ல பல்லவ படைக்கும், வாதாபி படைக்கும் நடக்கும் போரில் புலிகேசி மாண்டு போகிறார். இதை அறிந்த நாகநந்தி புலிகேசியின் உடலை எரித்து விட்டு, புலிகேசி போலிருக்கும் தானே கோட்டைக்குள் சக்கரவர்த்தியாக செல்கிறார். தான் செய்த சபதம் நிறைவேறி வாதாபி பற்றி எரிவதை சிறிது நேரம் ரசித்த சிவகாமி, பிறகு சம்பவங்களின் கோரம் தாங்காமல் உள்ளே செல்கிறார். வாதாபி மக்களின் கூக்குரல் சிவகாமியை மிரட்ட அங்கு சக்கரவர்த்தியாக வரும் நாக நந்தி தான் அந்த பெண்ணை கவனித்துக் கொள்வதாக சொல்லி மக்களை அப்புறப்படுத்தி உள்ளே நுழைகிறார்.


                                      அவர் சிவகாமியுடன் சம்பாஷித்து கொண்டிருக்கையில் சிவகாமியின் சிநேகிதி கமலியின் கணவன் கண்ணனின் உயிர் சிவகாமி கண் முன்னே பிரிய, சிவகாமி மயக்கமுறுகிறாள். மயக்கமுற்ற சிவகாமியை எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்புறம் உள்ள சுரங்க வழியாக பிட்சு தப்பிச்  செல்ல பின்னேயே துரத்தி வரும் சேனாபதி பரஞ்சோதியுடம் மாட்டிக் கொள்கிறார். இனி தான் தப்பிக்க முடியாது என தெரிந்த நாக நந்தி சிவகாமியை கொல்ல நினைத்து கத்தியை எரிய அப்போது அங்கு வரும் பரஞ்சோதி பிசுவின் கையை வெட்டுகிறார். கூடவே உன்னை உயிருடன் விட வேண்டுமானால் என்றும் மங்காத அஜந்தா வர்ண ரகசியத்தை கூறும்படி சொல்கிறார். ஆகா எனது உயிருக்கு விலையாக என்றும் அழியாத அந்த வர்ண ரகசியத்தை ஈடாக வைத்தாயே என பரஞ்சோதியை பாராட்டி விட்டு, அந்த வர்ண ரகசியத்தை பரஞ்சோதியுடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து செல்கிறார்.

                                  மயக்கம் தெளிந்த சிவகாமி கண்ணனின் உடலைக்  காண வேண்டுமென சொல்ல எல்லோரும் அங்கு செல்கின்றனர். அப்போது அங்கு வந்த மாமல்லர் தனது ரத சாரதியான கண்ணனின் உயிரற்ற உடலைக் கண்ட ஆத்திரத்தில் சிவகாமியிடம் இப்போது உனக்கு திருப்தியா என வினவ அந்த வார்த்தைகளின் கணம் தாங்காமல் சிவகாமி மயக்கமடைந்த நிலையில் தனது தந்தை ஆயனருடன்(சிற்பி) காஞ்சி சென்றடைகிறாள்.


                                             இதற்கிடையில் போரில் நடந்த உயிர் பலிகளை காணச் சகியாது பரஞ்சோதி சிவனடியார் சிறுத்தொண்டர் ஆகிறார். ஆம் இவரே பிள்ளைக்கறி கேட்ட இறைவனுக்கு தன் மகனையே அரிந்து உணவாக படைத்து, பின் இறைவன் அருளால் மகன் மறுபடி மீண்டு வர இறைவனுடனே சேர்கிறார். ஆம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் சிறுத்தொண்டர் ஒரு காலத்தில் பல்லவ சேனாபதியாக விளங்கிய பரஞ்சோதி ஆவார். இது சரித்திரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியாகும்.


                                   நான்காம் பாகம் இறுதிக் கட்டமானது போரில் புலிகேசியை வென்று வாதாபி கொண்டோன் எனும் பட்டப்பெயருடன் மாமல்லர் காஞ்சிக்கு திரும்பி வர சக்கரவர்த்தியின்(மாமல்லரின்) பட்டணப்பிரவேச ஊர்வலம் நடக்கிறது. மாமல்லரும் அவரது மனைவியும், குழந்தைகளும்    இரதத்தில் ஊர்வலம் வரும் சமயத்திலேயே சிவகாமிக்கு மாமலருக்கு திருமணமான விவரம் தெரிய வர, சிவகாமியின் இதய நரம்பு படாரென அறுந்தது என்ற ஆசிரியரின் வர்ணனையை படிக்க நேரும் போது, நமது இதய நரம்பும் படாரென அறுந்ததை போன்றதொரு உணர்வு. அந்த அளவுக்கு நாவலின் பெருன்பான்மையான நேரம் நாம் சிவகாமியின் உணர்வுகளின் ஊடே பயணிக்கிறோம்.
                                     இறுதியாக சிவகாமி காஞ்சியில் குடிகொண்டுள்ள இறைவனான ஏகாம்பர நாதரையே தன் பதியாக ஏற்றுக்  கொண்டு, மாங்கல்யம் சூடி, கோவிலில் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் என பாடியபடியே நடனமாட, அந்த அற்புதமான நடன வினிகையை மாமல்லர் பார்த்து விட்டு கோவிலை விட்டு நீங்கிச் செல்ல, தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என சிவகாமியின் பாடல் வரிகள் அவரது செவியில் விழுவதோடு இந்த அற்புதமான காவியம் முடிவுக்கு வருகிறது. கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டாலும் இதன் கணம் நம் நெஞ்சை விட்டு வெகு காலம் ஆனாலும் நீங்க மாட்டேன் என்கிறது. 
                                 காலத்தால் வெல்ல முடியாத அற்புதமான ஒரு படைப்பு சிவகாமியின் சபதம் என்பதை இதைப்  படித்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.
 
இந்த பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்...




 

வியாழன், 22 டிசம்பர், 2022

தலப்பாக்கட்டி பிரியாணி(திண்டுக்கல்)

                                      இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது என்ற பாட்டிற்க்கிணங்க சாப்பாட்டை ரசித்து சாப்பிடும் உறவுகளுக்காகவே இந்த தலப்பாக்கட்டி பிரியாணி பதிவு... 


                        திண்டுக்கல்லுக்கே பிரியாணி ரசிகர்களிடம் வரவேற்பை தேடித் தந்த தலப்பாக்கட்டி பிரியாணியை இந்த வாரம் நாமும் ருசிப்போமா?


                                         ஒரு பசியான மதிய உணவு இடைவேளையின் போது நம் கண் முன்னே மட்டன் பிரியாணியை வாழை இலையில் பரப்பி வைத்தால் எப்படி இருக்கும்.நொடியில் சாப்பிட்டு முடித்து விடுவோம் இல்லையா? அது போன்ற நேரத்தில்தான் நாம் தேனி ஆனந்தம் பின்புறம் உள்ள தலப்பாக்கட்டி ரெஸ்டாரண்டிற்க்கு சென்றது. 


                           தலப்பாக்கட்டிக்குள் நுழையும் போதே பிரியாணி வாசனை தூக்கியடித்தது. ஆங்காங்கே அமைத்திருந்த  டேபிள்களில் ஒரு டேபிளை  தேர்ந்தெடுத்து அமர்ந்தோம். உடனடியாக மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு சுற்றிலும் பார்வையை  ஓட்டினோம்.


                                பிரியாணி வாழை இலையில் சுடச்சுட வந்து அமர சொல்லவும் வேண்டுமா? மட்டன் பிரியாணியை சிக்கனுடன் சேர்த்து, தயிர் வெங்காயத்தின் சுவையுடன் ஒரு கை பார்த்தோம்.


                                சுடச்சுட மசாலா கலவையில் ஊறிய சிக்கன் மணத்துடனும், சுவையுடனும் நம் அருகே உள்ள டேபிளில் பரிமாறப்பட நாமும் அதை கொண்டு வரச் சொல்லி ருசித்தோம்.


                                          மீனிலும் பலவகையான வெரைட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. படத்தில் பார்க்கும் போதே ஒரு வாய் ருசி பார்க்க வேண்டும் என நம் எண்ணத்தை தூண்டுகிறதல்லவா?


                             மட்டன் எலும்பு கிரேவி, மட்டன் பிரியாணியுடன் அடுத்த சுற்று வர அதையும் ருசித்தோம். மசாலாக்கலவையில் ஊறி மணமணத்த மட்டன் துண்டை ஒரு வாய் வைக்க அடுத்த ஒரு நிமிடத்தில் பிரியாணியிடன் சேர்ந்து மின்னல் வேகத்தில் காலியானது.


                    இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி என்னவெனில் 1952-ல்  நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்த விலாஸ் பிரியாணி,சப்பாத்தி ஹோட்டல் என்ற பெயரில் ஒரு உணவகம் தொடங்கி அது நஷ்டப்படவே அதற்கான காரணங்களை ஆராய்ந்து 1957-ல் அதே பெயரில் உணவகத்தை தொடங்கினார். 
                                    அவரது கைப்பக்குவத்தில் உருவான பிரியாணியின் ருசி வாடிக்கையாளரைக்  கவர்ந்தது. அவர் சமையல் பணியில் இருக்கும்போது அவரது வழுக்கை தலையை மறைக்க தலைப்பாகை கட்ட அதுவே வாடிக்கையாளர்கள் அவரை தலப்பாக்கட்டி நாயுடு என அழைக்க காரணமானது. பின்னாளில் உணவகத்தின் பெயரே தலப்பாக்கட்டி என மாறி  திண்டுக்கல்லில் தலப்பாக்கட்டி பிரியாணி என பிரபலமானது.


                                        என்னதான் விதவிதமான உணவுகள் நம்மை ஈர்த்தாலும் பரோட்டா மீதிருக்கும் ஆவல் மட்டும் நமக்கு குறைவதே இல்லை. எனவே மட்டன் பிரியாணி, எலும்பு கிரேவி, சிக்கன் லாலிபாப், மீனுடன் சேர்த்து சால்னாவில் ஊறிய பரோட்டாவையும் சாப்பிட்டு முடித்த பிறகே நமது வயிறு திருப்தியானது.


                                 இந்த தலப்பாக்கட்டி தேனி ஆனந்தத்துக்கு எதிர்புறம் அமைந்துள்ள ஒரு கிளை உணவகம். தலப்பாக்கட்டி உணவகம் இன்று திருச்சி,மதுரை,கோவை,சென்னை என பல இடங்களிலும் தன் கிளைகளை பரப்பி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.


                                             இந்த படத்தில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டல் திண்டுக்கல் கடை வீதியில் சர்ச்சுக்கு அருகே இயங்கி வருகிறது. கடை வீதிக்கு வருபவர்கள் பெரும்பாலும் இங்கு சாப்பிட்டும், பார்சல் வாங்கியும் செல்கின்றனர்.


                                      தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டலில் மட்டன் பிரியாணி, கீமா பால் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பன்னீர் பிரியாணி, முட்டை பிரியாணி, காளான் பிரியாணி, வெஜ் பிரியாணி, குஸ்க்கா என பக்கெட்டுகளிலும் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் நாட்டுக் கோழி மிளகு வறுவல், நாட்டுக்கோழி இடிச்ச வறுவல், சிக்கன் போன்லஸ், பள்ளிபாளையம் சிக்கன், போன்லஸ் ரோஸ்ட், தீப்பொறி லாலி பாப், நாட்டுக்கோழி சாப்ஸ் பிரட்டல், சிக்கன் வறுத்த கறி, மட்டன் சுக்கா , குச்சி மட்டன், இறால், மீன் 65 என இன்னும் சைவத்திலும் பன்னீர் 65, வெஜ் ஸ்ப்ரிங் ரோல், கோபி 65, மஸ்ரூம் 65 என பல வகைகள் நம்மை ருசி பார்க்கத் தூண்டுகின்றன.
 

                                      அனைத்து வகைகளிலும் நமக்கு பிடித்த பிரியாணி,வறுவல் என ருசி பார்த்த பிறகு ஐஸ்கிரீம், ஸ்வீட் என அதனையும் சுவைத்து விட்டு பார்சலுடன் அங்கிருந்து விடை பெற்றோம். நீங்களும் இங்கு சென்று சுவைத்து விட்டு உங்கள் உணவு அனுபவங்களை பகிருங்கள் உறவுகளே...

பதிவு தொடரும்...





திங்கள், 28 நவம்பர், 2022

சாந்தி குளிர்பானம், திண்டுக்கல்

                                  ஒரு மதியநேரம் கடைவீதியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது வெயிலுக்கு எங்காவது அமர்ந்து பழச்சாறு அருந்தலாம் எனத் தோன்ற உடனே அருகிலிருக்கும் சாந்தி குளிர்பானம் நம் நினைவில் மின்னலடித்தது. நாங்கள் அடிக்கடி செல்லும் கடை அது.

 
                                  திண்டுக்கல் கடைவீதியில் இயங்கி வரும் இந்த சாந்தி குளிர்பானம் பெரும்பாலோரால் சாந்தி கூல்ட்ரிங்க்ஸ் என அழைக்கப்படும். நமது சாந்தி குளிர்பானத்தில் புரூட் மிக்ஸ்சர்(பழக்கூழ்) மிகவும் சிறப்பான தயாரிப்பு என எனக்குத் தோன்றும். 


                           பழமுதிர்ச்சோலை போன்ற பல கடைகளில் இந்த புரூட் மிக்ஸர் கிடைத்தாலும் நான் அடிக்கடி இங்குதான் வருவேன். பப்பாளி, வாழைப்பழம், திராட்சை, டூட்டிபுரூட்டி, பேரிச்சம்பழம் மற்றும் பலவற்றை சேர்த்து அதனுடன் மேலாக ஐஸ்கிரீமையும் சேர்த்து கெட்டியாக ஸ்பூனுடன் நமது டேபிளில் கொண்டு வந்து வைப்பார்கள். 



                                        இங்கு வரும் நிறைய மக்கள் இந்த புரூட் மிக்ஸர் ஆர்டர் செய்து சாப்பிடுவர். அனைத்து பழங்களும் கலந்து ஐஸ்கிரீமுடன் இருக்கும் அந்த  பழக்கலவையை ஒரு வாய் எடுத்து வாயில் இட்டு ருசிக்க வெயிலுக்கு நாவில் ஜில்லென்று இறங்கிய பழச்சுவையில் அடுத்தடுத்த ஸ்பூன் வெகு வேகமாக காலியாகியது.


                                           இங்கு புரூட் மிக்ஸர் மட்டுமல்லாது வெஜிடபிள் பப்ஸ்,முட்டை பப்ஸ் என  அனைத்தும் கிடைக்கும். அங்கேயே அமர்ந்து சாப்பிடலாம். பார்சலாகவும் கொண்டு செல்லலாம்.


                                முட்டை பப்ஸ் பொன்னிறத்தில் நன்றாக பொரிந்து  உள்ளே முட்டை மற்றும் மசாலாக் கலவையுடன் வெகு ருசியாக இருந்தது. புரூட் மிச்சருடன், இதனையும் சேர்த்து சாப்பிட்டோம். வயிறு நிரம்பிய உணர்வு.


                                 புரூட் மிக்ஸர் வந்தவுடன், உங்கள் பார்வைக்காக நமது கேமராவில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து விட்டு,  பிறகே அதனைச் சுவைத்தேன்.
புரூட் மிக்ஸரை சுவைக்கும் ஆசை உங்களுக்குள்ளும் உதயமாகிறதல்லவா?


                                           புரூட் மிஸ்சருடன் சேர்த்துச்  சுவைக்க இந்த வகை சிப்ஸும் ஒரு தட்டில் நம் அருகே வைத்து விடுவார்கள். அது ஒரு வாய், இது ஒரு வாய் என ருசிக்க சுவை சொல்லில் அடங்காது.


                                     திண்டுக்கல் கடை வீதியில் இயங்கும் இக்கடையில் பல நேரம் கூட்டமாகவே இருக்கும். கடைக்கு உள்ளே மூன்று டேபிள்கள் போடப்பட்டு பன்னிரண்டு பேர் அமரக்கூடிய வகையில் இருக்கும். டேபிள்களுக்கு சிறிது தள்ளி நாலைந்து ஸ்டூல்களும் அமரக்கூடிய வகையில் போடப்பட்டு இருக்கும்.


                                 இந்த சாந்தி குளிர்பானத்தில் எல்லா வகையான ஸ்னாக்ஸ்களும் கிடைக்கும். அதுமட்டுமல்லாது பாதாம் பால், ரோஸ் மில்க், கூல் ட்ரிங்க்ஸ், ஐஸ்கிரீம், காபி, டீ என அனைத்துமே அவரவர் சுவைக்கேற்ப கிடைக்கும்.


                                       இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் திண்டுக்கல் வந்தால், சாந்தி குளிர்பானம் சென்று சுவை மிகுந்த புரூட் மிக்ஸரை ருசித்துப் பாருங்களேன்...

தொடரும்...
















 

சனி, 19 நவம்பர், 2022

நம்ம ஊரு செட் பரோட்டா

                                  பரோட்டாவை தினம் தினம் ரசித்து ருசித்துச்  சாப்பிடும் பரோட்டா பிரியர்களுக்காகவே இந்தப் பதிவு. சென்ற முறை நமது பரோட்டா பதிவில் வாழை இலை பரோட்டா விருந்து பரிமாறினோம். இம்முறை செட் பரோட்டா சாப்பிடுவோமா?


                                         நாம் விரும்பி சாப்பிடும் பரோட்டாக்களில்தான் எத்தனை வகையான ருசிகள் நமக்கு நாள்தோறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன? ஆஹா பரோட்டா என சொல்லும் போதே நாவூறுகிறதே. சிலோன் பரோட்டா, விருதுநகர் பரோட்டா, நத்தம் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, மலபார் பரோட்டா  என ஊரின் பெயராலேயும், தேசத்தின் பெயராலேயுமே பல வகையான பரோட்டாக்கள். 


                               நம்மில் பலருக்கும் அறிமுகமான செட் பரோட்டாவை சுவைக்க கடைக்குச்  சென்றோம். நமது ஊரில் பேகம்பூர் மற்றும் பல ஏரியாக்களில் இந்த பரோட்டா கிடைக்கிறது. கடைக்கு அருகே நெருங்கும் போதே சால்னா வாசம் காற்றில் மிதந்து வந்து நமது நாசியைத் துளைத்தது. 


                             என்னதான் செட் பரோட்டாவை சுவைப்பதற்காகவே அந்தக்  கடைப்பக்கம் சென்றாலும் காற்றில் மிதந்து வந்த சால்னாவின் மணம் நமக்கு சாதா பரோட்டாவும் வாங்கி அதில் சால்னாவை ஊற வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என நினைக்கும் போதே வயிறு பசியைத் தூண்ட சாதா பரோட்டாவும் ஆர்டர் செய்தோம்.
 

                                கடையில் அமர்ந்த உடனேயே சாதா பரோட்டா, நாட்டுக்கோழி சால்னா சொல்லி விட்டு அமர்ந்தோம். சால்னா கிண்ணத்திலும், பரோட்டா இலையிலும் வந்து அமர பரோட்டாவை உடனடியாக பிய்த்துப்  போட்டு, சால்னாவில் மூழ்கடித்து ஒரு வாய் எடுத்துச்  சுவைக்க ஆஹா .. அற்புதம் என மனம் கூவியது.


                           அடுத்ததாக செட் பரோட்டாவை கொண்டு வந்து நமது இலையில் பரிமாறினர். சாதா பரோட்டாக்களை மிக்ஸியில் அரைத்து அதை ஒரு சிறிய தட்டில் இட்டு அதில்  மட்டன் சால்னாவை ஊற்றி மூழ்கடித்து, நன்றாக மட்டன் சால்னாவில் ஊறிய பரோட்டாவின் மீது ஆங்காங்கே மட்டன் துண்டுகளை இட்டவுடன், சூடான செட் பரோட்டா ரெடி.


                                         செட் பரோட்டாவை நமது இலையில் வைத்தவுடனேயே சிறிது நேரம் அதனை ரசித்து விட்டு, அதன் மணத்தை நன்றாக நுகர்ந்து விட்டு வாய்க்குள் வைத்தவுடனேயே செட் பரோட்டா உடனடியாக வாய்க்குள் கரைந்து காலியானது. மணமும், சுவையுமான  செட் பரோட்டாவை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கும் பார்சல் செய்தோம்.


                            பரோட்டாவை சாப்பிட்டு விட்டு ஆம்லெட் சுவைக்கவில்லையானால் எப்படி எனத் தோன்ற அதையும் சேர்த்துச்  சுவைத்தோம்.


                                     நாட்டுக்கோழி கிரேவி இலையில் பார்க்கும் போதே ருசிக்கத் தூண்டுகிறதல்லவா? அதனை பரோட்டாவுடனும், சுடச்சுட ஆம்லேட்டுடனும் சேர்த்துச்  சாப்பிட சுவை தூக்கியடித்தது.

                                      செட் பரோட்டாவையும், சாதா பரோட்டாவையும் நன்றாக ரசித்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்கும் நாட்டுக்கோழி சால்னாவுடன் பார்சல் கட்டிச் சென்றேன். வீட்டில் குழந்தைகள் ரசித்துச் சாப்பிட நானும் இன்னொரு முறை செட் பரோட்டாவை  சிறிது எடுத்து ருசித்தேன். நீங்களும் ஒரு முறை சுவை மிகுந்த செட் பரோட்டா வாங்கி ருசியுங்கள் உறவுகளே...


பரோட்டா பதிவு தொடரும்....




























செவ்வாய், 8 நவம்பர், 2022

தஞ்சை பெரிய கோவில் நோக்கி ஒரு பயணம்

                                         ஒரு அந்தி மாலை நேரம், ஆதவன் தன் பயணத்தை முடித்துக்  கொண்டு ஆரஞ்சு நிற பந்தாய் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த வேளையில் தஞ்சை நகருக்குள் பிரவேசித்தேன். தஞ்சை பெரிய கோவிலையும், அதில் உள்ள சிற்பங்களையும், ஓவியங்களையும் காண வேண்டும், சோழர்களின் வரலாற்று காலத்தை நுகர வேண்டும்  என்ற ஆர்வத்தினாலேயே இப்பயணத்தை மேற்கொண்டேன்.

                                 வெகு நாட்களாகவே தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இன்று நிறைவேற தஞ்சை நோக்கி  பயணப்பட்டேன். மதிய நேரம் சாப்பிடாமலே கிளம்பியதால் மாலையில் வெகுவாக பசிக்க ஆரம்பித்தது. அருகில் உள்ள உணவகத்தில் ஒரு தோசையும், காப்பியும் அருந்தி விட்டு பயணத்தைத்  தொடர்ந்தேன். தோசையுடன்  சாம்பார், தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி என அதற்க்குரிய வியங்சனங்களுடன் சாப்பிட நன்றாக  இருந்தது. 

                                     தஞ்சை மண்ணில்  காலை வைத்தவுடனேயே அதனை தலை நகராய் கொண்டு பல காலம் சோழ தேசத்தை ஆண்ட சோழ மன்னர்களின் நினைவு வெகுவாய் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வாழ்ந்த பூமியில் இப்போது நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.



                                         தஞ்சை தரணியெங்கும் செழித்தோங்க சோழர்கள் ஆட்சி செய்த காலம் எவ்வாறாக இருந்திருக்கும் என்ற எண்ணமே மனமெங்கும் மேலோங்க கோவிலுக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தேன். ஆஹா என்னவொரு அற்புதமான உணர்வு இது. ராஜராஜ சோழர் பாதம் பதிந்த இந்த அற்புதமான கற்கோவிலில் நாமும் நின்று கொண்டிருக்கிறோம் என்பதே ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.

                               நந்தி பகவானை வணங்கி விட்டு, உள்ளே சென்று சிவலிங்கத்தை தரிசித்தேன். தீபம் காட்டப்பட தொட்டு வணங்கி விட்டு வெளியே வந்து கோவிலைச் சுற்றி மெல்ல நடந்தேன்.

                                       ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று வணங்கி விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கற்களாலே மாயா ஜாலம் நிகழ்த்திய அந்த சிற்பிகளை மனதில் எண்ணிக் கொண்டேன். நான் வாசித்த உடையார் நாவலும், அதில் கோவில் உருவான விதம் விளக்கப்பட்ட வரலாறும் என் எண்ணங்களில் மேலோங்கி நின்றது.



                                 கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் தத்ரூபமாய் செதுக்கப்பட்டு நம்மை பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.


                              இந்த நந்தி பகவான் சிலைதான் ராஜாராஜர் காலத்தில் செதுக்கப்பட்ட நந்தி பகவான் சிலை என அறியப்படுகிறது.


                                  கோவிலில் உள்ள அனைத்து ஓவியங்களும் சோழர் கால ஓவியக் கலைக்கு சான்றாக நம் பார்வைக்கு கிடைக்கிறது. 


                                   என்ன மாதிரியான வண்ணங்களை கலந்து செய்திருந்தால் இன்று வரை நம் பார்வைக்கு வண்ண ஓவியமாகவே காட்சியளிக்கிறது என சிந்தனைகள் மேலோங்கின.



இராஜ இராஜரும்,கருவூர் தேவரும்.

                                         இராஜ இராஜர் உருவம் எப்படி இருந்திருக்கும் என அறியத் துடிக்கும் உள்ளங்களுக்காகவே இந்த ஓவியத்தை தீட்டியிருப்பார்கள் போலும் என எண்ணத் தோன்றுகிறது.


                              கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள்  நாம் சோழர் காலத்தைப் பற்றியும், கோவில் கட்ட உதவியர்களை பற்றியும் மற்றும் பல விவரங்களையும்  அறியத்  துணை செய்கின்றன.


                                      சோழர்கள் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் எவ்வாறாக இருந்திருக்கும் என மனதின் அலைகள் பின்னோக்கி சென்றன. கோவிலை மறுபடியும் சுற்றி வந்து மறக்க முடியாத நியாபகங்களை அசை போட புகைப்படமும் எடுத்துக் கொண்டு கோவிலை விட்டு நீங்க மனமில்லாமல் நீங்கினேன்.


                               காவேரிக் கரையோரம் கோபுரம் தெரிய அற்புதமான கோவிலின் படைப்பை வியந்து நின்று விட்டு பேருந்தில் ஏறினேன். என்னுடைய பயண அனுபவத்தை உங்களுடன் பகிரவே இந்தப் பதிவை எழுதினேன். வேறொரு பயண அனுபவத்தில் சந்திப்போம் நட்புகளே...