புதன், 21 பிப்ரவரி, 2024

ஆட்டு தலைக்கறி குழம்பு விருந்து

                                  வணக்கம்  உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் தலைக்கறி குழம்பு சுவைப்போமா? ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலரது வீடுகளில் அசைவம்தான் முதலிடம் பிடிக்கும். நமது வீட்டிலும்தான். வழக்கமான ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுவது சலிப்புத்  தட்ட வீட்டினரின்  ஏகோபித்த கருத்தால் இம்முறை தலைக்கறி வாங்கி  சமைத்துச்  சுவைக்கலாம் என கறிக்கடைக்கு கிளம்பினோம்.


                         சண்டே ஸ்பெசலாக அனைவரது வீட்டிலும் அசைவ வாசனை காற்றில் மிதக்கும் என்பதால் 6 மணிக்கே கறிக்கடையில் வழக்கம் போல  கூட்டம்.
                                  எனக்கு ஒரு கிலோ கறி, இங்க ஈரல் மட்டும் கொடுங்க, எனக்கு குடல் சுத்தம் செய்து கொடுங்கள். எனக்கு ஆட்டுக்கால் சீக்கிரம் வாட்டுங்கள் என பல வித சப்தங்களுக்கிடையே தலைக்கறியை சுத்தம் செய்து வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தோம். வீடு வந்து தலைக்கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வைத்தேன். இப்போது சமைக்க ஆரம்பிப்போமா?


தலைக்கறி செய்யத்  தேவையானவை :

தலைக்கறி - 1 கிலோ (அ ) தலை ஒன்று 

வெங்காயம் - 200 கிராம் 

தேங்காய் - தேவையான அளவு 

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்  

பிரியாணி இலை - 1 மற்றும்  கிராம்பு - 5

 மிளகாய் தூள் - 4 ஸ்பூன்  

இஞ்சி பூண்டு - தேவையான அளவு 

மல்லித்தூள் - 1 ஸ்பூன் 

ஜாதிபத்ரி - சிறிது 

சோம்பு - சிறிது 

இலவங்கப்பட்டை - சிறிய துண்டு


தலைக்கறி செய்முறை :

1. தலைக்கறியை சுத்தமாகக் கழுவி 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5 விசில் விடவும்.

2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து  கொத்தமல்லி, இலவங்கப்பட்டை,  கிராம்பு, சோம்பு மற்றும் ஜாதிபத்ரியை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பின் இதனை மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.              வெங்காயம், தக்காளி தனியாக வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.            
பின் குழம்பு வைக்க தேவையான அளவுக்கு தேங்காய் எடுத்து தனியாக    அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலையை      வதக்கவும். பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின் அரைத்து வைத்த வெங்காயம், தேங்காய்  சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

5. பின்பு வேக வைத்த தலைக்கறியை அந்தக் கலவையில் சேர்த்து 5 நிமிடம் மூடி  வைக்கவும். பின் மூடியை அகற்றி மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்  கலக்கவும். பின் மற்றொரு 5 நிமிடத்திற்கு பின் தண்ணீர் சேர்த்து வேக  விடவும்.                


6. தண்ணீர் சேர்த்த பின் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு தலைக்கறிக்குழம்பு  கெட்டியாகும் வரை சமைக்கவும்.

7. குழம்பின்  மேலே எண்ணெய் மிதக்கும். பின் அதன் மேல் கொத்தமல்லித் தழை  தூவி அடுப்பை அணைக்கவும்.

8. இப்போது ருசியான தலைக்கறி குழம்பு தயார்.


                                          வீடு முழுவதும் மிதந்த தலைக்கறிக் குழம்பின் வாசனை  பசியைத் தூண்டியது. அனைவருக்கும் வாழை இலையை விரித்து அதில் வெள்ளை சாதத்தை பரிமாறி அதன் மேல் தலைக்கறி குழம்பை ஊற்றி பிசைந்து ஒரு வாய் சாப்பிட ஆகா வெகு சுவையாக இருந்தது. தலைக்கறி நன்கு வெந்து மெதுவாக இருக்க சாதத்துடன் சேர்த்து வாழை இலை வாசனையுடனும், தலைக்கறி குழம்பின் வாசனையுடனும் சாப்பிட நிமிடத்தில் இலை காலியாகி தலைக்கறி குழம்பு விருந்து நம் வயிறை நிரப்பியது.


                                  தலைக்கறியுடன் ஒரு மூளை வாங்கி பெப்பர் பிரை செய்து சாப்பிட சுவை இன்னமும் தூக்கியடிக்கும். ஒரு வாய் தலைக்கறி, சாதம், குழம்புடன் சுவைத்து, பின் மறு வாய் சாதம், குழம்புடன் மூளை பிரை சேர்த்துச் சாப்பிட வெகு திருப்தியாக ஞாயிறு விருந்து மனதையும், வயிறையும் நிறைத்தது.


                                                                               தலைக்கறி சாதத்திற்க்கு மட்டுமல்லாமல், இட்லி, ராகி களிக்கும் சேர்த்துச் சாப்பிட சுவை நன்றாக இருக்கும். நீங்களும் ஒரு முறை தலைக்கறி சுவையுங்கள் உறவுகளே.


மற்றொரு ஞாயிறு விருந்தில் சந்திப்போம்...

சனி, 4 நவம்பர், 2023

சிக்கன் வித் பரோட்டா

                                 இந்த வாரம் நமது அபியின் பயணங்களில் சிக்கன் வித் பரோட்டாவுடன் சுவை மிகுந்த பயண அனுபவத்தை ரசிப்போமா? வானத்தில் மெல்ல மெல்ல வெளிச்சம் பரவ ஆரம்பித்த ஒரு விடியல் நேரத்தில்  மழைத் தூறலுடன் நமது  பயணத்தை துவக்கினோம். ஆம், சிறுமலை நோக்கித்தான் நமது பயண இலக்கு 


                                            தினமும் நகர வாழ்க்கையில் மூழ்கி காலை எழுந்து வேலைக்குச் சென்று மாலை கூட்டுக்குள் அடையும் பறவை போல பயணித்த நாட்களில் இருந்து வெளியேறி  மனதிற்கு ஒரு இனிதான மாற்றம் வேண்டி விடுமுறை நாளில் சிறுமலைப்  பயணத்தை மேற்க்கொண்டோம். வழியில் காலை உணவுக்காக நிறுத்தி தோசை, சாம்பாரில் மூழ்கி எழுந்து, மதியத்துக்கான சாப்பாடு பார்சலாக பரோட்டாவையும், சிக்கன் கிரேவி, சிக்கன் சால்னா, சிக்கன் 65 வாங்கிக் கொண்டோம். 


                                                  சிறுமலை பதினெட்டு கொண்டை ஊசி வளைவுகளுடன் சுற்றிலும் இயற்கை காட்சிகள் சூழ நம்மை வரவேற்றது. மலையில் ஏறியவுடன் தேநீர் அருந்தி விட்டு அகஸ்தியபுரம் நோக்கிச் சென்றோம். லிங்கத்துக்குள் அம்மனுடன் அமைதியான ஒரு இயற்கைச் சூழல். அங்கங்கே நிறுத்தி இயற்கையை ரசித்துக் கொண்டே சென்றோம். 


                                          சிறுமலை ஏறியவுடன்  உள்ள வாட்சிங் டவரில் ஏறி சுற்றிலும் தெரியும் மலையின் காட்சிகளை ரசித்தோம். பின் அங்குள்ள பல்லுயிர் பூங்காவுக்கும் சென்றோம். செயற்கை அருவியுடன், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் பூங்கா அமைந்துள்ளது. அதனை ரசித்து விட்டு வானம் கருக்க ஆரம்பித்ததால் மலையை விட்டு இறங்க ஆரம்பித்தோம்.


                                               சிறுமலை கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது பசி வயிற்றைக் கிள்ள, வெகுநேரமாக பார்சலில் உள்ள பரோட்டாவுடனான, சிக்கன் சால்னா, சிக்கன் 65 மணமும் நம்மை சாப்பிட வா வா என அழைக்க மலையிறங்கும் வழியில் ஒரு ஓரமாக அமர்ந்தோம். 


                                           சிறுமலையைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை கண்களால் அள்ளிப் பருகியபடியே, சாப்பிட ஆரம்பித்தோம். உணவின் சுவையும், மலையின் அழகும் புதியதொரு இதமான  உணர்வை நமக்குள் ஏற்படுத்தின.


                                     பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பல வகையான  சால்னா, குருமா, மட்டன் சுக்கா, மீன் வறுவல், முட்டைக் கலக்கி, குடல் வறுவல், குடல் குழம்பு, மூளை பிரட்டல், ஈரல் வறுவல், சுவரொட்டி என எத்தனையோ இருந்தாலும் நமக்கு பிடித்ததென்னவோ சிக்கன் சால்னா, சிக்கன் லெக் பீஸ், சிக்கன் கிரேவி என சிக்கன் வகைகள்தான்.


                                                          மலைக்  காற்று இதமாக வீச சுற்றிலும் பச்சை பசேலென இயற்கையே ஆட்சி செய்ய, அதன் நடுவே நாம் அமர்ந்து நமக்குப் பிடித்த உணவை ருசித்தால், ஆஹா... அதன் சுவையை சொல்ல வார்த்தைகளே இல்லை.


                                            பசியில் பரோட்டாவும், சிக்கன்  லெக் பீசும், சிக்கன் சால்னா மணமும்  வெகுவாக ருசிக்க ஒரு பிடி பிடித்தோம். சிக்கன் சால்னாவில் ஊறிய பரோட்டாவை ஒரு பிரட்டு பிரட்டி, சிக்கன் 65 உடன் சேர்த்து வாயில் வைக்க, அபாரமான சுவை நம் நாவின் வழியே நுழைந்து , வயிற்றை திருப்தி செய்தது.


                                           சிக்கன் வித் பரோட்டாவுடன் திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு, அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டு, மறுபடியின் சிறுமலையின் அழகை ரசித்தவாறே மலையிறங்கி வீட்டுக்குச் சென்றோம். இந்த விடுமுறை நாள் மனதுக்கு வெகுவான இதத்தையும், உற்சாகத்தையும் நல்கியது. நீங்களும் பயணத்தோடு கூடிய உங்களுக்கு பிடித்த உணவுகளின் சுவையையும் ருசியுங்கள் உறவுகளே...

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....
 

சனி, 16 செப்டம்பர், 2023

முக்குளி

                                        வணக்கம் உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் முக்குளி சுவைப்போமா?  முக்குளி பணியாரம் என்பது மறைந்து போன நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுதான்.... இப்போது நாம் பதிவுக்குள் செல்வோமா?


                                                       நமது பாரம்பரிய பலகாரங்கள் சத்து மிகுந்ததாக எத்தனையோ உள்ளன. இப்போதைய மக்களில் சிலர்தான் இதை பற்றி அறிந்திருக்கிறார்கள். பாரம்பரிய உணவு வகைகளை பற்றி நமது பதிவின் மூலம் சொல்லும் முயற்சியே இந்த முக்குளி பணியாரம்.


                                                  முந்திரிக்  கொத்து, தேன் குழல், நீராளம், புட்டு என வகை வகையான நமது பாரம்பரிய பலகார வகைகளை நம்மில் பலர் சுவைத்திருக்க மாட்டோம். இப்பொது முக்குளி எப்படி செய்வது என்பதையும், அதன் சுவையையும் ருசிப்போமா?


முக்குளி செய்யத்  தேவையானவை 

பச்சரிசி -200 கிராம் 
கம்பு - 400 கிராம் 
தேங்காய் - 1/2 மூடி 
சுக்கு - 15 கிராம் 
ஏலக்காய் - 20கிராம் 
வெல்லம் - 1/2 கிலோ 
வெண்ணை - 20 கிராம் 



                                               பச்சரிசி, கம்பை 2 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை  நன்றாக கழுவி காய வைக்க வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் உரலில் இட்டு இடித்துக் கொள்ளவும். பின் அதனுடன் துருவிய தேங்காய், சுக்கு இடித்து போட்டு, ஏலக்காய் பொடி, வெண்ணை சேர்த்து மாவு உதிரி, உதிரியாக வருமாறு பிசைந்து கொள்ளவும்.


                                                       ஒரு சட்டியில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் அதை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி, நாம் தயார் செய்த பச்சரிசி, கம்பு என அனைத்தும் சேர்ந்த உதிரிக்  கலவையில் மாவு பதமாக வருமாறு கலக்கவும். அதனுடன் முந்திரி பருப்பும் சேர்க்கவும். பின் அந்த மாவை ஒரு நாள் நன்றாக புளிக்க விடவும். மறு நாள் எடுத்து பணியாரச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால் சுவையான முக்குளி பணியாரம் தயார். இதையே வேறொரு வகையாகவும் செய்யலாம்.


முக்குளி மற்றொரு வகை செய்யத்  தேவையானவை :

சத்து மாவு - 1/2 கிலோ 
துருவிய தேங்காய் - 1/2 மூடி 
ஏலக்காய் - சிறிது 
நெய் - சிறிது 
வெண்ணெய் - சிறிது 
வெல்லம் இடித்தது - உங்கள் இனிப்பு சுவைக்கேற்ப தேவையான அளவு 
முந்திரி - 10


                                                சத்து மாவுடன், துருவிய தேங்காய், நெய், வெண்ணெய், ஏலக்காய் தூள், வெல்லம், முந்திரி பருப்பு பொடித்து அனைத்தையும் மாவு பதத்திற்கு கரைத்து பின் பணியாரச் சட்டியில் வார்த்து எடுக்க முக்குளி பணியாரம் தயார்.


                                          முக்குளி பணியாரம் நாம் பாரம்பரிய முறைப்படி தயார் செய்து உண்ணும் போது சுவையும், மணமுமாக அருமையாக இருக்கிறது. காலை, மாலை பலகார வேளைகளில் இதை தயார் செய்து சாப்பிட சத்துடன், சாப்பிட ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் இதை செய்து கொடுப்பதுடன், பாரம்பரிய உணவு வகைகள் சிலவற்றையாவது சொல்லிக் கொடுத்தால், அவை அடுத்த தலைமுறைக்கும் போய்ச்  சேரும்.



                                                          முக்குளி பணியாரம் காலை வேளையில் செய்து சாப்பிட, வெகு ருசியாக இருந்தது. சாப்பாடாகவும், தின்பண்டமாகவும் உள்ள முக்குளி பணியாரம் நல்லதொரு உணவு அனுபவம். நீங்களும் செய்து ருசித்து பாருங்களேன்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....



செவ்வாய், 5 செப்டம்பர், 2023

ஆயங்கலைச் சோறு விருந்து

                                   தஞ்சைத்  தரணியை செழிக்கச் செய்யும் காவிரியும் அந்த காவேரிக்  கரையை சுற்றி வாழும் கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரியமாய் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த ஆயங்களைச்சோறு விருந்தாக உங்கள் பார்வைக்கு ... 
வாருங்கள் உறவுகளே நாமும் ஆயங்களைச்சோறு விருந்துக்குள் செல்வோம்.


                                            பொங்கல் பண்டிகை என்பது நமது தமிழகத்தில் பாரம்பரிமாய் கொண்டாடப்பட்டு வரும் சிறப்புமிக்க ஒன்றாகும். வீட்டுக்கு வெளியே அடுப்பு மூட்டி புது பொங்கல் பானையில் உலைகொதிக்க அரிசியிட்டு மண்டவெல்லத்துடனும், பாலுடனும் பொங்கல் இனிதாக பொங்கி வழிந்தவுடன் வாழைப்பழம் தேங்காய், பொங்கலுடன் சூரியனுக்கு படையலிட்டு வணங்குவர். அத்தகைய பொங்கல் பண்டிகை இப்போதெல்லாம் வீட்டுக்குள் குக்கருடனும், காஸ் அடுப்புடனும் முடிந்து விடுகிறது. ஆனாலும் சில கிராமங்களில் மரபு மாறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவே இந்த ஆயங்களைச்சோறு விருந்தாகும்.


                                            தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாட்டுப் பொங்கலன்று  நடைபெறும் நிகழ்வுதான் ஆயங்களைச்சோறு விருந்து. ரெட்டவயல், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கீரமங்கலம் ஊர் பகுதிகளில் நாம் மாட்டுப் பொங்கலன்று சென்றோமானால் இந்த ஆயங்களைச்சோற்றை ருசிக்க முடியும். 


                                         மாட்டுப் பொங்கலன்று இரவு மாட்டுக் கிடையில் பொங்கப்படுகிறது இந்த ஆயங்களைச்சோறு . எல்லா ஊர்களிலும் மாட்டுக் கிடைக்குனு ஒரு மைதானம் இருக்கும் என பேச்சை ஆரம்பித்தார் அந்த ஊர்க்காரர் ஒருவர். மார்கழி இறுதி நாளில் மாட்டுக்கிடை மந்தையை உழுது அதன் நடுவில் சதுரமாக மண் மேடை கட்டி, அச்சுக்கம்பு அடித்து வைப்பார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு விதம் விதமான வர்ணங்கள் பூசி, வேப்பிலை, கன்னிப்பூ மாலை கட்டி, நன்றாக தீனி போட்டு விட்டு மாடுகளை கூட்டி வந்து கிடையில் கட்டி விடுவார்கள்.


                                      மாட்டுக்கிடையில் மைக் செட், தோரணம் என கட்டி, மேடைக்கு நடுவில் ஒரு மண்ணாலான பிள்ளையாரை பிடித்து வைத்து, தென்னம் பாளையால்  அலங்காரம் செய்கிறார்கள். அந்த சாமிக்கினு ஒரு பூசாரி இருக்கிறார். வாயை கட்டிக்கிட்டுதான் பூசை செய்யனும். சாமிக்கு எதிரே நீளமாக பள்ளம் வெட்டி ஆடு, மாடு வச்சுருக்கவங்க வெண்பொங்கல் இடுவார்கள்.


                                       பொங்கல் பானைகள் அனைத்தையும் பிள்ளையார் முன் இறக்கி வைத்து, பெரிய  இலைகளைப் போட்டு ஒவ்வொரு பானையில் இருந்தும் வெண் பொங்கலை அள்ளி வைப்பார் பூசாரி. அதன் மேல் வாழைப்பழங்களை உரித்து அடுக்குகிறார்கள். அதன் மேல் மீண்டும் சாதம் வைப்பாங்க.


                                        அதன்மேல் பலாப்பழம். இப்படி பேரிச்சை, முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல்னு எல்லாவற்றையும் அடுக்கி சர்க்கரை கொட்டுகிறார்கள். அதை அப்படியே ஊற விட்டு, சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவாங்க. இளவட்டப் பசங்க பெரிய ஓலைகளால் பந்தங்களைக் கட்டி, மந்தையை சுற்றி ஓடி வந்து ஆடு, மாடுகளுக்கு திருஷ்டி கழிப்பார்கள். இதெல்லாம் முடிந்தவுடன் சோறு இருக்கிற இலையை சுற்றி நான்கு பேர் அமர்கிறார்கள். இந்த நாலு பேரும் ஊருக்கு பொதுவான ஆட்களா இருக்கனும். அவங்கதான் ஆயங்களைச் சோத்தைப் பிசைஞ்சு தரணும் என்கிறார் அவ்ஊரைச் சேர்ந்தவர்.


                                      பழங்களும், சர்க்கரையும் ஊறிய அந்த சாதத்தை பார்க்கும் போதே நாவு சுரக்கிறது. முதல் மரியாதை மாடுகளுக்குத்தான். அனைவரும் சேர்ந்து மாடுகளுக்கு ஊட்டுகிறார்கள். அப்போது பொங்கலோ பொங்கல் என எழும் சத்தம் ஏழு கடல்களையும் தாண்டி ஒலிக்கிறது. 
                                         பின்னர் குழந்தைகளுக்கு இந்தச் சோற்றை ஊட்டி பால்குடி மறக்கடிப்பார்கள். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் வேறு திட உணவுக்கு மாறுவதற்கு முன் இதைச் சாப்பிட்டால் பேச்சு நன்றாக வரும், நோய் நொடிகள் அண்டாது என்ற நம்பிக்கை. பின்னர் மற்றவர்களுக்கும் இந்த சோறு பிசைந்து தரப்படுகிறது.
 

                                           இன்றைக்கு கிராமங்களில் ஆடு, மாடுகள் குறைந்தாலும், கொண்டாட்டம் குறையவில்லை. மாடு இல்லாதவங்க கூட மந்தைக்கு வந்து பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் சோறை மறுநாள் வைத்திருந்து உண்ணலாம். ஆனா ஆயங்களைச்சோறு சீக்கிரமே கெட்டுப்போகும். அதனால் அன்றே ஆசை தீரச் சாப்பிட்டுடனும். இரவு 12 மணிக்குத்தான் பூசைகள் முடிந்து சோறு தயாராகும். அதுக்காகவே விழித்திருந்து சாப்பிடுவோம் என நம்மிடம் அவர்களது ஆயங்களைச்சோறு அனுபவங்களை பகிர்ந்தார் ஒருவர். அதை நான் உங்களிடம் பகிரவே இந்த ஆயங்களைச்சோறு விருந்து பதிவு.
                                      ஆயங்களைச்சோறு தித்திப்பாக இருந்ததா உறவுகளே, வேறொரு பதிவில் சந்திப்போம்....



செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

பன் பரோட்டா

                             காலை, மதியம், இரவு என எந்த நேரமானாலும் பரோட்டாவைச்   சால்னாவுடன்  குழப்பி அடிக்க விரும்பும்  நமது பரோட்டா ரசிகர்களுக்காகவே இந்த பன் பரோட்டா பதிவு... 

வணக்கம் உறவுகளே, வெகு நாட்களுக்குப் பின் நமது அபியின் பயணங்களில் பதிவில் பன் பரோட்டாவைச் சுவைப்போமா? 

                                           பரோட்டா என நினைக்கும் போதே  ஆஹா... நாவில் உமிழ் நீர் சுரக்கிறது. மொறு மொறுவென பொன்னிறத்தில் பரோட்டாவை பார்க்கும் போதே அதை சாப்பிட்டே ஆக வேண்டும் போல் இருக்கும். சாதா பரோட்டாவுக்கே இத்தகைய உணர்வு என்றால் பன் பரோட்டாவை ரசித்து ருசித்துச் சாப்பிடும் அந்த சுவையான அனுபவம் எப்படி இருக்கும்?

                           நாம் விரும்பிச் சாப்பிடும் பரோட்டாக்களில் இப்பொது பல வகைகள். கிழி பரோட்டா, வாழை இலை பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா, எண்ணெய் பரோட்டா என விதம் விதமான சுவைகளில் பரோட்டாக்கள் தயாரிக்கப்பட்டு நமது நாவின் சுவை நரம்புகளைத் தூண்டுகிறது. இதில் ஒரு தூக்கலான சுவை அனுபவம்தான் பன் பரோட்டா.

 

                               கடை வீதி வழியாக தூரத்தில் வரும்போதே பரோட்டாவின் வாசனையும், சால்னாவின் தூக்கலான மணமும் நம்மை வெகுவாக இழுத்துச் சென்று அந்த பரோட்டாக் கடை முன் நிறுத்தியது. கடை முன் நின்று பார்த்த போது அந்த பாத்திரம் முழுவதும் பொன்னிறமான பன் பரோட்டாக்கள். அதனை பார்த்தவுடனே நம் கால்கள் அங்கேயே நகர மறுத்து நின்று விட்டன.


                                         பரோட்டாக்களின் சுவைக்காக நாவு ஏங்க ஓட்டலுக்குள் நுழைந்தோம். பன் பரோட்டா, சிக்கன் சால்னா, சிக்கன் 65 என பரோட்டாவுடன் சேர்த்து ருசிக்கும் வகையிலான உணவுகளை  ஆர்டர் கொடுத்து விட்டு டேபிளின் முன் அமர்ந்தோம். மற்ற டேபிள்களை நோக்கி பார்வை பாய  ஆங்காங்கே இருவர், நால்வர் என குடும்பத்துடன் அமர்ந்து பரோட்டாவை ருசித்துக் கொண்டிருந்தனர். பன் பரோட்டா, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, கலக்கி, மட்டன் சுக்கா என அவரவர் ரசனைக்கேற்ப சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  


                                               நமது முன்னேயும் பச்சை வாழை இலை விரிக்கப்பட்டு  பன் பரோட்டா, சிக்கன் 65, கலக்கி, முக்கியமாக பரோட்டாவின் சுவையை வெகுவாக ருசிக்கத் தூண்டும் சிக்கன் சால்னா  என அனைத்தும் வந்தமர்ந்தது. கண்கள் அனைத்து வகைகளையும் ரசித்துக் கொண்டிருக்க, கைகள் வெகு வேகமாக பரோட்டாவை பிய்த்து சால்னாவுடன் ஊறவைத்து வாய்க்குள் அனுப்பிக் கொண்டிருந்தன.


                                   ஒரு பன் பரோட்டாத் துண்டு சால்னாவில் துவைத்து வாயில் வைக்க  ஆஹாஹா... அற்புதமான சுவை என மனமும், நாவும் கும்மாளமிட்டன. மேலே சற்று மொறு மொறுப்பாக உள்ளுக்குள் மெத்து மெத்தென்று பூப்போல பன் பரோட்டாவின் சுவையே சுவை. ஒரு நொடியில் பரோட்டாக்கள் இலையில் இருந்து வயிற்றுக்குள் காணாமல் போயின.


                                                  பெரிய தோசைக்கல்லில் சற்றே எண்ணெய்யில் பொன்னிறமாகக் காட்சி தந்த பன் பரோட்டாக்கள் வெந்த  வேகத்திலேயே அனைவரது இலைக்கும்  சென்று சேர்ந்து மறைந்தன.  


                                                   நாமும் நமது இலைக்கு வந்த பரோட்டாவைச் சால்னாவுடனும், சிக்கன் 65 , கலக்கி, மற்றொரு வகை குருமா என ஒவ்வொன்றுடனும்  சேர்த்துச் சுவைக்க அந்த  மாலை மயங்கிய இரவு வேளை பன் பரோட்டாவுடன் வெகுவாக மனதில் நிறைந்தது.


                                                            பன் பரோட்டாவை ஆசை தீரச் சாப்பிட்டு விட்டு மறக்காமல் வீட்டுக்கும் பத்து பன் பரோட்டாக்கள், கொத்து பரோட்டா, கலக்கி என பார்சல் வாங்கி விட்டுக் கிளம்பினோம். பன் பரோட்டா அனுபவம் சுவை மிகுந்ததாக இருந்ததா உறவுகளே? மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....

பரோட்டா பதிவு தொடரும்...












 

சனி, 7 ஜனவரி, 2023

சிவகாமியின் சபதம் மனதை தொடும் நான்காம் பாகம்(சிதைந்த கனவு)

                            சிவகாமியின் சபதம் திரு.கல்கி அவர்கள் எழுதிய புகழ்பெற்ற நாவல். இதன் முதல் மூன்று பாகங்களை ஏற்கனவே நமது பார்வையில் என்ற தலைப்பில் நாம் பார்த்த நிலையில் நான்காம் பாகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன். 


                             சிவகாமியின் சபதம் நான்காம் பாகம் சிவகாமி சாளுக்கியரிடம் சிறைப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு பிறகான சம்பவங்களை வாதாபி போருடன் சேர்த்து விளக்குகிறது. இதற்குள் மகேந்திர பல்லவரின்  இறப்பு, மாமல்லரின் திருமணம்  பாண்டிய      இராஜகுமாரியுடன் நடைபெற்று இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிலை, இது எதுவும் தெரியாமல் மாமல்லரையே நினைத்து அவர் போர் தொடுத்து, வாதபியை எரித்து தன்னை மீட்டுச் செல்வார் என்ற சிவகாமியின் மனோநிலை என பலவற்றையும் தொட்டுக் கதை நகர்கிறது.


                                           பல சவால்களை கடந்து பெரும்படை திரட்டி மாமல்லரின் தலைமையில், பரஞ்சோதியை சேனாபதியாக கொண்டு படையெடுத்துச் செல்லும் பல்லவர் படை பெரும்  வெற்றியடைந்து வாதாபிக்  கோட்டையை முற்றுக்கையிடுகிறது. வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி கோட்டைக்குள் இல்லாமல் அஜந்தா கலை விழாவுக்கு சென்ற நிலையில் கோட்டை சரணடைவதாக சமாதானத்  தூது மாமல்லரிடம் வந்து சேர்கிறது. 


                                    அஜந்தாவில் இருக்கும் சக்கரவர்த்திக்கு இச்செய்தி தாமதமாகவே தெரிய வர தன்னிடம் ஏன் சொல்லவில்லை என தனது சகோதரர் நாகநந்தியுடம் வினவ வேண்டுமென்றேதான் மறைத்தேன், உனக்காக அரச பதவியை துறந்து புத்த பிட்சு ஆன என்னிடம் நீ சரியாக நடக்கவில்லை என சிவகாமியை காரணம் காட்டி சண்டை முற்ற உடன் பிறந்ததால் உன்னை உயிருடன் விடுகிறேன், இங்கிருந்து சென்று விடு என சக்கரவர்த்தி கர்ஜிக்க நாகநந்தி அங்கிருந்து செல்கிறார்.


                              புலிகேசி வேறொரு படையுடன் வாதாபியை நோக்கிச்  செல்ல பல்லவ படைக்கும், வாதாபி படைக்கும் நடக்கும் போரில் புலிகேசி மாண்டு போகிறார். இதை அறிந்த நாகநந்தி புலிகேசியின் உடலை எரித்து விட்டு, புலிகேசி போலிருக்கும் தானே கோட்டைக்குள் சக்கரவர்த்தியாக செல்கிறார். தான் செய்த சபதம் நிறைவேறி வாதாபி பற்றி எரிவதை சிறிது நேரம் ரசித்த சிவகாமி, பிறகு சம்பவங்களின் கோரம் தாங்காமல் உள்ளே செல்கிறார். வாதாபி மக்களின் கூக்குரல் சிவகாமியை மிரட்ட அங்கு சக்கரவர்த்தியாக வரும் நாக நந்தி தான் அந்த பெண்ணை கவனித்துக் கொள்வதாக சொல்லி மக்களை அப்புறப்படுத்தி உள்ளே நுழைகிறார்.


                                      அவர் சிவகாமியுடன் சம்பாஷித்து கொண்டிருக்கையில் சிவகாமியின் சிநேகிதி கமலியின் கணவன் கண்ணனின் உயிர் சிவகாமி கண் முன்னே பிரிய, சிவகாமி மயக்கமுறுகிறாள். மயக்கமுற்ற சிவகாமியை எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்புறம் உள்ள சுரங்க வழியாக பிட்சு தப்பிச்  செல்ல பின்னேயே துரத்தி வரும் சேனாபதி பரஞ்சோதியுடம் மாட்டிக் கொள்கிறார். இனி தான் தப்பிக்க முடியாது என தெரிந்த நாக நந்தி சிவகாமியை கொல்ல நினைத்து கத்தியை எரிய அப்போது அங்கு வரும் பரஞ்சோதி பிசுவின் கையை வெட்டுகிறார். கூடவே உன்னை உயிருடன் விட வேண்டுமானால் என்றும் மங்காத அஜந்தா வர்ண ரகசியத்தை கூறும்படி சொல்கிறார். ஆகா எனது உயிருக்கு விலையாக என்றும் அழியாத அந்த வர்ண ரகசியத்தை ஈடாக வைத்தாயே என பரஞ்சோதியை பாராட்டி விட்டு, அந்த வர்ண ரகசியத்தை பரஞ்சோதியுடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து செல்கிறார்.

                                  மயக்கம் தெளிந்த சிவகாமி கண்ணனின் உடலைக்  காண வேண்டுமென சொல்ல எல்லோரும் அங்கு செல்கின்றனர். அப்போது அங்கு வந்த மாமல்லர் தனது ரத சாரதியான கண்ணனின் உயிரற்ற உடலைக் கண்ட ஆத்திரத்தில் சிவகாமியிடம் இப்போது உனக்கு திருப்தியா என வினவ அந்த வார்த்தைகளின் கணம் தாங்காமல் சிவகாமி மயக்கமடைந்த நிலையில் தனது தந்தை ஆயனருடன்(சிற்பி) காஞ்சி சென்றடைகிறாள்.


                                             இதற்கிடையில் போரில் நடந்த உயிர் பலிகளை காணச் சகியாது பரஞ்சோதி சிவனடியார் சிறுத்தொண்டர் ஆகிறார். ஆம் இவரே பிள்ளைக்கறி கேட்ட இறைவனுக்கு தன் மகனையே அரிந்து உணவாக படைத்து, பின் இறைவன் அருளால் மகன் மறுபடி மீண்டு வர இறைவனுடனே சேர்கிறார். ஆம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் சிறுத்தொண்டர் ஒரு காலத்தில் பல்லவ சேனாபதியாக விளங்கிய பரஞ்சோதி ஆவார். இது சரித்திரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியாகும்.


                                   நான்காம் பாகம் இறுதிக் கட்டமானது போரில் புலிகேசியை வென்று வாதாபி கொண்டோன் எனும் பட்டப்பெயருடன் மாமல்லர் காஞ்சிக்கு திரும்பி வர சக்கரவர்த்தியின்(மாமல்லரின்) பட்டணப்பிரவேச ஊர்வலம் நடக்கிறது. மாமல்லரும் அவரது மனைவியும், குழந்தைகளும்    இரதத்தில் ஊர்வலம் வரும் சமயத்திலேயே சிவகாமிக்கு மாமலருக்கு திருமணமான விவரம் தெரிய வர, சிவகாமியின் இதய நரம்பு படாரென அறுந்தது என்ற ஆசிரியரின் வர்ணனையை படிக்க நேரும் போது, நமது இதய நரம்பும் படாரென அறுந்ததை போன்றதொரு உணர்வு. அந்த அளவுக்கு நாவலின் பெருன்பான்மையான நேரம் நாம் சிவகாமியின் உணர்வுகளின் ஊடே பயணிக்கிறோம்.
                                     இறுதியாக சிவகாமி காஞ்சியில் குடிகொண்டுள்ள இறைவனான ஏகாம்பர நாதரையே தன் பதியாக ஏற்றுக்  கொண்டு, மாங்கல்யம் சூடி, கோவிலில் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் என பாடியபடியே நடனமாட, அந்த அற்புதமான நடன வினிகையை மாமல்லர் பார்த்து விட்டு கோவிலை விட்டு நீங்கிச் செல்ல, தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என சிவகாமியின் பாடல் வரிகள் அவரது செவியில் விழுவதோடு இந்த அற்புதமான காவியம் முடிவுக்கு வருகிறது. கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டாலும் இதன் கணம் நம் நெஞ்சை விட்டு வெகு காலம் ஆனாலும் நீங்க மாட்டேன் என்கிறது. 
                                 காலத்தால் வெல்ல முடியாத அற்புதமான ஒரு படைப்பு சிவகாமியின் சபதம் என்பதை இதைப்  படித்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.
 
இந்த பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்...