திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 மார்ச், 2021

பூத்திருவிழா



பூத்திருவிழா (திண்டுக்கல்  கோட்டை மாரியம்மன்)
 
                             வரலாற்றுப்  புகழ் மிக்க ஹைதர் அலியோடும், திப்பு சுல்தானோடும் தொடர்புடைய மலைக்கோட்டையை தன்னுள்ளே கொண்டுள்ள திண்டுக்கல் மாநகரத்தில் கோட்டை மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழாவை பற்றிய நிகழ்வுகளே இந்தப் பதிவில் பூத்திருவிழாவாக  உங்களது பார்வைக்கு.... 

கோட்டை மாரியம்மன் 

                                         மலைக்கோட்டைக்குக்  கீழே பரந்து விரிந்திருக்கிறது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டதையெல்லாம் வாரிக்  கொடுக்கும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவில். வருடா வருடம் மாசி மாதம் கோட்டை மாரிக்கு நடைபெறும் இத்திருவிழா மாசித்திருவிழா என திண்டுக்கல் மக்களால் கொண்டாடப்படும். திண்டுக்கல் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் கோட்டை மாரிக்கு மாசி மாத திருவிழாவின் போது அவரவர்  நேர்த்திக்கடனை பக்தி சிரத்தையோடு செலுத்துவர்.

                                                                    பூக்கோலங்கள் 

                                                வருடத்திற்க்கு ஒரு முறை மாசி மாதம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றுவதற்க்கு  முதல் வாரம்  வியாழக்கிழமையன்று கோவில் வளாகத்தின் உள்ளே பூக்களாலேயே கோலமிடப்பட்டு எழிலுற விளங்கும். பக்தர்கள் வரிசையாக நின்று பூக்களால் வரையப்பட்ட கோலங்களை பார்த்து ரசித்தவாறு உள்ளே சென்று அம்மனை தரிசித்து மகிழ்வர். 


பூக்கோலங்கள் 

                                         பல வகை வண்ணங்களாலான மலர்களைக் கொண்டு கோலங்கள் எழிலுற வரையப்பட்டு நடுவில் தெய்வச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். நேர்த்தியாக போடப்பட்டிருக்கும் கோலங்களை பார்க்கும் போது கோலத்தை உருவாக்கியவர்களை நிச்சயம் பாராட்டத் தோன்றும்.

பூத்தேர் 

                                        வெள்ளிக்கிழமையன்று பூக்களாலேயே அலங்கரிக்கப்பட்ட தேரில் தெய்வங்கள் ஊர்வலமாக நான்கு வீதிகளிலும் வலம் வருவர். பக்தர்கள் அவரவர் கைகளில் இருக்கும் பூ பொட்டலங்களை பூத்தேரில் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து விட்டு திருநீறு வாங்கி கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபடுவர்.

பூத்தேரில் வலம் வரும் தெய்வங்கள் 

                                         பூத்தேரில் விநாயகர், முருகர், ஐயப்பன் என அனைத்து தெய்வங்களும் அமர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும் அழகை காண  வீதி தோறும் பக்தர்கள் காத்திருப்பர். வீதி உலா முடிந்த பிறகு பூத்தேர் கோவில் வளாகத்துக்குள் திரும்பிச்  செல்லும்.

பூத்தேரை தரிசிக்கும் மக்கள் 

                                                 பூத்தேர் வழக்கமாக மஞ்சள் நிற மலர்களாலும், வாடா மல்லி பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகளோடு வலம் வரும். பூத்தேரோடு பின்னால் மோர் வைக்கப்பட்ட வண்டிகளும் தொடர்ந்து வரும். வீதி முழுவதும் காத்திருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த  பிறகு  மோரை வாங்கி அருந்தி விட்டு பாட்டில்களிலும் கொண்டு சென்று வீட்டில் இருப்போருக்கும் கொடுத்து மகிழ்வர். சிறு வயதில் நாங்கள் சிறுவர் சிறுமிகளாக சேர்ந்து மோரை வாங்கி குடித்துக் கொண்டே தேரின் பின்னேயே சென்று வருவோம்.

திருவிழாவுக்கு ஏற்றப்படும் கொடி 
 
                                   திருவிழாவுக்கான ஆரம்பமாக  மாசி மாதம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டு 15 நாட்கள் திருவிழா உற்சாகமாக நடைபெறும். கொடியேற்றிய பிறகு கொடி இறங்கும் நாள் வரை யாரும் வெளியூருக்கு செல்லக் கூடாது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் திருவிழாவுக்கு முன்பே விரதமிருந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

 
அம்மனுக்கு பால் குடம் எடுக்கும் பக்தர்கள் 

                                              கொடி ஏற்றப்பட்டப்  பிறகு  புதன் கிழமையிலிருந்து தினந்தோரும்  காலையில் பால் குடம், முளைப்பாரி ஊர்வலமும், மாலையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.

அம்மன் தசாவதாரத்தில்  

                               திருவிழாவில்   தினம் தோறும் நடக்கும் மண்டகப்படிகளும், தேர் வீதி உலாக்களும் முடிந்த பிறகு சனிக்கிழமையன்று அம்மன் தசாவதாரத்தில் காட்சி அருளுவார். இரவு முழுவதும் அம்மன் வித விதமான அவதாரங்களில் காட்சி தருவார். பெரும்பாலான பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி இருந்து அம்மன் தசாவதாரத்தை கண்டு மகிழ்வர்.


அம்மன் ஊஞ்சல் சேவை தரும் காட்சி 

                                                      தசாவதாரம் முடிந்த பிறகு திங்கள் கிழமையன்று அம்மன் அலங்காரமாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஊஞ்சல் சேவையில் காட்சி தரும் அம்மனை காண கூட்டம் கூட்டமாக மக்கள் வரிசையில்  நின்று காத்து கிடந்து இரவு முழுவதும் அம்மனை தரிசித்து கொண்டேயிருப்பர்.

அம்மன் தெப்பத்தில் அருளும் காட்சி 

                                  ஊஞ்சல் சேவைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை அம்மன் தெப்பத்தில் சயனித்தபடி காட்சி தருவார். தெப்பத்தில் சயனித்தபடி இருக்கும் அம்மனை காண கண்கோடி வேண்டும். அந்த அளவுக்கு அம்மன் அலங்காரம் சிறப்பாக இருக்கும். தெப்பத்திருவிழா கடைசி நாள் திருவிழா என்பதால் கூட்டம் முதல் நாளை விட அதிகமாகவே இருக்கும். அனைவரும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து கோவில் மைதானத்தில் போர்வையை விரித்து குடும்பத்தோடு அமர்ந்து வேடிக்கைகளை கண்டு களித்தவாரே உணவருந்தியும், அம்மனை தரிசித்தும், பலர் அம்மனுக்கு மாவிளக்கும் வைத்து மகிழ்வர். இந்த வருடம் கொரோனா காரணமாக திருவிழா சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

எங்கள் ஊர் பூத்திருவிழாவை பதிவாக காண(வாசிக்க ) வந்தோருக்கு மிக்க நன்றி... 

இப்பதிவை வாசிப்போருக்கும்  திருவிழா சென்று வந்த உணர்வு தோன்றினால் கமெண்ட் பாக்சில் பதிவு செய்யவும்...

செவ்வாய், 22 மார்ச், 2016

டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழா 

                                        கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் அப்பள கடை இடம்பெறாமல் இருந்ததே இல்லை. கோவிலுக்கு வரும் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து முடித்தவுடன் மைதானத்தில் இருக்கும் கடைகளை சுற்றி பார்த்து விட்டு அவரவருக்கு தேவையான பொருட்களை வாங்கியானதும் படையெடுப்பது அப்பள கடைக்குத்தான். கோவிலுக்கு வரும் பெரும்பாலான மக்கள்  அப்பளம் வாங்காமல் சென்றதில்லை. அந்தளவுக்கு அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகள் இங்கு பிரபலம். அப்பளம், பானிபூரி, காலிபிளவர் பக்கோடா என வாங்கி மைதானத்தில் தாங்கள்  கொண்டு வந்த விரிப்பை விரித்து அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே  கொறித்துக் கொண்டிருப்பர் .


                                                     அப்பளக்கடை

                                                     மிளகாய் பஜ்ஜி

                                                  காலிபிளவர் பக்கோடா


                                             அப்பளம், பஜ்ஜி வாங்கிய போது




                                                      மிளகாய் பஜ்ஜி          


                                                       பானி பூரி


                                                      பேல் பூரி

                                      இங்குள்ள அப்பள கடைகளோடு பானி பூரி, பேல் பூரி மசாலா பூரி, மசாலா சுண்டல்  போன்ற வகைகளும் இங்கே பரபரப்பாக விற்பனையாகிக்  கொண்டிருக்கும் .


                               மாவிளக்கு நாங்கள் போட்ட போது எடுத்த படம்

                                               இந்தக் கோவிலில் உள்ளூர் மக்களில் இருந்து வெளியூர் மக்கள் வரை அனைவரும் ஒரு நாள் இங்கு வந்து அம்மனுக்கு மாவிளக்கு இட்டு தேங்காய், பழம் உடைத்து பூஜை செய்வர்.  சிலர் தங்கள் குடும்பத்தாருக்கு எந்த பிணியாக இருந்தாலும் அது தீர வேண்டும் என்பதற்காக   மாவிளக்கு வைப்பதாக வேண்டுவர். அதன் படியே குடும்பத்தாருடன் வந்து அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப கண்ணில், வயிற்றில் என மாவிளக்கை இலையிடன் வைத்து எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். பெரும்பாலான மக்கள் கொடி இறங்குவதற்கு முன்னரே  இந்த மாவிளக்கு நேர்த்திக் கடனை செலுத்தி  விடுவர்.


                                                     மாவிளக்கு போடும் பக்தர்கள்

                                              வேண்டுதல் மாவிளக்குகள்

                                                  தீச்சட்டி வேண்டுதல்கள்

                                              திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. பக்தர்கள் வேண்டும் வரம் தரும் இந்த கோட்டை மாரியம்மனை நீங்களும் ஒரு முறை தரிசித்து விட்டு செல்லுங்களேன் .




புதன், 17 பிப்ரவரி, 2016

மனம் மகிழும் திருவிழா

மாரியம்மன் திருவிழா கடைகள் 

                                     திண்டுக்கலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கோட்டை மாரியம்மன் திருவிழா 15 நாட்கள் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பே கடைகள், வித விதமான ராட்டினங்கள் என அனைத்தும் இடம்பெற்று விடும் .இவை திருவிழா முடிந்த பின்னரும் 1 மாதம் வரை இருக்கும் .திண்டுக்கல் மக்களுக்கு இந்த திருவிழா பக்தியோடு பொழுதுபோக்கு அம்சத்தையும் தருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை வேளை வந்து விட்டால்  கூட்டம் அலைமோதும் . எல்லா மதத்தினரும் இங்கு வந்து செல்வர் .  சுற்றிலுமுள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்கள் சாப்பாடு கட்டிக் கொண்டு குழுவாக வருவர். இவர்கள் அம்மனை தரிசித்துவிட்டு கோவில் மைதானத்திலேயே தங்கி  சாப்பிட்டு விட்டு இரவு முழுவதும் அங்கே நடக்கும் வேடிக்கைகளை கண்டுகளித்தபடி இருந்து  விட்டு காலையில் செல்வர். பெரும்பாலும் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் போது இந்த கூட்டம்  அதிகம் இருக்கும்.

இதோ உங்கள் பார்வைக்கு சில படங்கள் ...



                                                வீட்டு  உபயோக பொருட்கள் 

                                                பல வகை கரண்டி,தட்டுக்கள் 
                                         
                                                        விளையாட்டு பொருட்கள் 

                                           குழந்தைகளுக்கான பொம்மைகள் 

                                                அலங்கார பொருட்கள் கடை 

டெல்லி அப்பள கடை 

                                             கலர் கலராக மின்னும் குருவிகள் 

                                                       தற்காலிக டீஷர்ட் கடை 

                                             பால் மற்றும் தண்ணீர் விற்பனை

அம்மன் அலங்காரத்தில் .....

                                           தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் 

                                               சீரியல் விளக்கில் மாரியம்மன் 

                                                      மின்னும் அலங்கார தேர் 

                              குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகள் கோவில் உள் மைதானத்திலும், கோவிலுக்கு பின்புற வெளி மைதானத்திலும் அமைகப்பட்டிருக்கும் .

அவற்றில் சில ....

                                            நீரில்  விளையாடும் குழந்தைகள் 

குழந்தைகள் குதித்து விளையாட 

                                               ஜெயின்ட்வில்லில் ஏறும் வழி  

                                                          தாலாட்டும் போட் 

                                                  குடை ஸ்டைலில் ராட்டினம் 

                                           தண்டவாள ரயில்களில் நகர்வோர் 

                                 இக்கோவிலில் காலையில் கோவில் கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றுவோரும்,பால் குடம் எடுப்போரும் அதிகம் இருப்பர் .ஆனால் காலையை விட மாலை வேளைகளில்  குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகம் காணப்படுவர். அவரவர் விருப்பத்திற்கேற்ப சுவாமி  தரிசனம் செய்து விட்டு அப்பளம், பானி  பூரி, ஐஸ் க்ரீம்  என  வாங்கி உண்டு  விட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதும் , ராட்டினத்தில் ஏறுவதுமாக பொழுது நகரும்.  

திங்கள், 15 பிப்ரவரி, 2016

வேண்டும் வரம் தரும் கோட்டைமாரியம்மன்

கோட்டை மாரியம்மன் திருவிழா 

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா ஆரம்பம்                                  
                                               எங்கள் மண்ணுக்கே பெருமை சேர்க்கும் கோவில்களில் முதன்மையானது அபிராமி அம்மன் கோவிலும் கோட்டை மாரியம்மன் கோவிலுமாகும் .மற்றும் பல கோவில்கள் திண்டுக்கல் மாநகரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக இருந்தாலும் மாரியம்மன் கோவில் திருவிழா சுற்றி உள்ள அனைத்து கிராம மற்றும் நகர மக்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் திருவிழாவாகும் . இந்த மாசி மாதத்தில்தான் பக்தர்கள் பெரும்பாலும் அம்மனுக்கு தாங்கள் நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


                                                      ஸ்ரீ கோட்டை மாரியம்மன் 

                                              தேரில் பவனி வரும் மாரியம்மன்


                                             மாரியம்மன் கோவில் முன் வாசல் 

                                                            கோவில் யானை 

                                    சீரியல் வெளிச்சத்தில் மின்னும் கிருஷ்ணர் 

                                                         அலங்கார   விநாயகர் 

                                                பகல் வெளிச்சத்தில் கோவில் 

                                        இரவில் தீச்சட்டி  எடுத்தபடி ஆடுவோர் 

                                     கோவிலைச்  சுற்றி தண்ணீர் ஊற்றுவோர் 

                                         தீச்ச்சட்டிக்கு முன் மேளம் வாசிப்போர் 

                                                 பகலில் தீச்சட்டி ஏந்துவோர்

                                               பகலில் தீச்சட்டி ஏந்தும் பக்தர்கள் 

                                 கோவிலுக்கு இடது புறத்தே விநாயகர் சன்னதி 

                                           அலகு குத்தியபடி தீச்சட்டி எடுப்பவர்   

வேண்டுதல்கள் :
            
                                 கோட்டை மாரியம்மனுக்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்கள் பல பல.... காலையில் 6 மணியில் இருந்தே கோவிலை சுற்றி பெண்கள் தண்ணீர் ஊற்றி இறுதியாக கொடிமரத்திற்கு ஊற்றுவர். பலர் இதை 3 நாட்கள் தொடர்ந்து செய்வர்.

வேண்டுதல்கள் பல வகை : 
                                                    பால் குடம் , தீச்சட்டி எடுத்தல் , முளைப்பாரி தூக்குதல் ,தீ மிதிப்போர் , மா விளக்கு போடுவோர், கண் மலர் வாங்கி போடுபவர்கள், கோவிலுக்கு ஆடு , கோழி நேர்ந்து விடுதல் என பலரும் பலவித வேண்டுதல்கள் செய்வர்.