செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )

பரோட்டா பார்சல்
       
                    அன்று ஒரு சனிக்கிழமை நாள், மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். என்ன சமைப்பது என யோசிக்க அனைவருக்கும் வீட்டு  சமையல் போரடித்ததால் பரோட்டா வாங்கி சாப்பிடலாம் என முடிவு செய்தோம். எங்கே வாங்குவது என யோசித்தபோது தெரிந்தவர் ஒருவர் அம்மா மெஸ்ஸில் நன்றாக இருக்கும் என சொன்னது நினைவு வர அங்கேயே வாங்கலாம் என முடிவு செய்து பரோட்டாவும் கரண்டி எனப்படும் முட்டை பதார்த்தமும் பார்சல் வாங்கினோம் .


   பரோட்டா சால்னா

                           பரோட்டா வாங்கியதும் வீட்டுக்கு சென்று அனைவரும் வட்டம் கூடி  அமர்ந்து ருசித்தோம். சேர்ந்து அமர்ந்து உண்ணும் போது எந்த உணவுமே சுவையாகவே இருக்கும். அதிலும் பரோட்டாவை  சாப்பிடும் போது மிகவும் சுவையாகவே இருந்தது. பொதுவாகவே  ரயில் பயணத்தின் போது பரோட்டா வாங்கி சென்று ரயிலில் அமர்ந்து சாப்பிடுவதை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு இரயிலில் செல்லும் போது நான் மட்டுமல்லாது பலரும் பரோட்டா வாங்கி வந்து உண்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். பரோட்டா என்பது அனைவரையும் கவரக்கூடிய உணவாக இருந்தாலும் திண்டுக்கல்லில் பிரியாணி மிகவும் பிரபலமானஉணவு வகையாகும்.

                                                                        கரண்டி

                       இந்த மெஸ்ஸில் பரோட்டாவோடு கூட  கரண்டி மிகவும் சுவையாக இருந்தது. பொதுவாக கரண்டி என்பது ஒவ்வொரு ஊரிலும் கலக்கி, போட்டி,ஆம்லட் என ஒவ்வொரு பெயரில் சொல்லப்படுகிறது. இதில் முட்டையுடன் வெங்காயம் மற்றும் சிலது  சேர்த்து குழி கரண்டி மாதிரி ஒன்றில் ஊற்றபடுகிறது. நான் சிறு வயதாய் இருந்த போது வீட்டில் என் அம்மா சாம்பிராணி போடும் குழி கரண்டி வைத்து  முட்டையை இப்படி உடைத்து ஊற்றுவார்கள். அது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


                                               பரோட்டவுடன் 2 வகை  சால்னா

                       இங்கு பரோட்டவுடன் இரண்டு வகை சால்னா தரப்படுகிறது .ஒன்று கறி  மசாலா குழம்பு சுவையிலும், மற்றொன்று தக்காளி சேர்த்து சற்று புளிப்புடன் கூடிய ருசியாகவும் உள்ளது .இரண்டு குழம்பையும் பரோட்டவுடன் சேர்த்து பிசைந்து கரண்டியுடன் சாப்பிட சுவையாக இருந்தது .

                                                             நாட்டுகோழி கிரேவி
                                         
                              அம்மா மெஸ் திண்டுக்கல் காட்டாஸ்ப்பத்திரி ரோட்டில் உள்ளது .இங்கு பணியாளர்கள் சீருடையணிந்து வேலை செய்கின்றனர் .பரோட்டா ஒன்று 13 ரூபாய் என விற்கப்படுகிறது .இங்கு பரோட்டாவை விட நாட்டுக்கோழி கிரேவி நன்கு விற்பனையாகிறது.அனைவரும் இதை பார்சல் வாங்கி செல்கின்றனர்.

                                 பரோட்டா என்பது சிலருக்கு அன்றாட உணவாகவும், பலருக்கு வீட்டு சாப்பாடு போரடிக்கும் போது  வாங்கி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. பொதுவாகவே பரோட்டா என்பது அனைவருக்கும் பிடித்த உணவாகும். திண்டுக்கல்லில் பரோட்டா 5 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை பல உணவகங்களில் பல வித சுவையில் விற்கப்படுகிறது .அதைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

                                                                                             

                                                                              பரோட்டா பார்சல் தொடரும்....

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன